பள்ளியில் அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களில் ஆண்களைப்போலவே பெண்களும் சிறப்புத் தேர்ச்சி பெறுகின்றனர். எனினும், பிற்காலத்தில் பெண்களுக்குத் தங்களின் திறன்கள் மீது இருக்கும் நம்பிக்கை குறைவதாக நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
'ஸ்டெம்' எனும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவை சார்ந்த துறைகளில் பெண்கள் வேலை செய்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருப்பதையும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. இத்தகைய வேலைகளில் ஈடுபட பல பெண்கள் ஆர்வம் காட்டி வரும்போதும் இந்நிலை உருவாகியுள்ளது.
738 சிங்கப்பூரர்களைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றோரில் 'ஸ்டெம்' பாடங்களில் பட்டம் அல்லது பட்டயம் பெற்ற 55 விழுக்காட்டுப் பெண்கள் மட்டுமே இந்தத் துறைகளில் வேலை செய்பவர்கள். ஆண்களுக்கு இந்த விகிதம் 70 விழுக்காடாகப் பதிவானது.
பெண்கள் பொதுவாக அறிவியல் துறைகளில் பணியாற்றுவதற்குப் பொருத்தமானவர்கள் அல்லர் என்ற சமூக அளவில் இருக்கக்கூடிய ஊகமும் இதற்குக் காரணம் என்று இந்த ஆய்வில் தெரியவந்தது.
'குளோசிங் தி ஜெண்டர் கேப் இன் சிங்கப்பூர்' எனும் அறிக்கையில் இந்த ஆய்வின் முடிவுகள் இம்மாதத் தொடக்கத்தில் வெளியிடப்பட்டன.

