'கம்ஃபர்ட்டெல்குரோ' நிறுவனம், அடுத்த ஆண்டு முற்பாதியில் சிங்கப்பூரில் இரண்டு தானியக்க டாக்சிகளை அறிமுகப்படுத்தவுள்ளது. வருங்காலத்தில் தானியக்க வாகனங்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளை 'கம்ஃபர்ட்டெல்குரோ' செய்து வருகிறது.
'ஆட்டொனொமஸ் விஹிக்கல்' எனும் தானியக்க வாகனங்களை உருவாக்க புதிய 30 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள நிலையத்தை 'கம்ஃபர்ட்டெல்குரோ' அமைத்துள்ளது. 'மோபில்ஐ' எனும் நிறுவனத்துடன் இணைந்து தானியக்க வாகனத் துறையில் முன்னணி வகிக்கும் இலக்கை 'கம்ஃபர்ட்டெல்குரோ' கொண்டுள்ளது.
தானியக்க வாகனங்களுக்கான தொழில்நுட்ப முறைகளை உருவாக்கும் பணியில் 'மோபில்ஐ' ஈடுபட்டுள்ளது. தானியக்க டாக்சிகளை சாலைகளில் செலுத்தமுடியும் காலம் வந்தால் அனைத்து தானியக்க வாகனங்களையும் நிர்வகிப்பதற்கான தொழில்நுட்பத் தளத்தை உருவாக்கவும் இவ்விரு நிறுவனங்களும் எண்ணம் கொண்டுள்ளன.
தானியக்க வாகனங்களுக்கான தொழில்நுட்ப முறைகள் தற்போது ஆரம்பக் கட்டத்தில்தான் இருக்கின்றன. எனினும், அடுத்த 10லிருந்து 50 ஆண்டுகளுக்குள் தானியக்க வாகனங்களை முழுவீச்சில் இயக்க முடியும் சூழல் உருவெடுக்கலாம் என்பது இந்தத் துறையின் கவனிப்பாளர்களின் கருத்து.
ஓட்டுநர்களில்லா நகரை உருவாக்க நகர மறுசீரமைப்பு ஆணையம் ஏற்கெனவே முயற்சிகளை எடுக்கத் தொடங்கிவிட்டது.
கடந்த ஐந்தாண்டுகளில் 50க்கும் அதிகமான பேருந்துகள், சாலையைக் கூட்டும் லாரிகள் உள்ளிட்ட தானியக்க வாகனங்கள் சிங்கப்பூரில் சோதனையிடப்பட்டு வருகின்றன.

