நிதித்துறை பகுப்பாய்வாளர் ஒருவர், 75 பேரை ஏமாற்றி கிட்டத்தட்ட $600,000ஐ பெற்றுக்கொண்டார். தவறான வழியில் கிடைத்த பணத்தை அவர் தமது மார்பக அழகை மேம்படுத்திக்கொள்ளும் சிகிச்சைக்காகப் பயன்படுத்திக்கொண்டார்.
அலெக்சாண்டிரா லோ ஸிங் யிங், 27, என்ற அந்த மாது, தனக்கு தெரிந்தவர்களையே குறிவைத்தார்.
நிதி நெருக்கடியைச் சுட்டிக்காட்டி கடனாக பணம் வேண்டும் என்று பொய்க் காரணங்களைக் கூறி அவர்களை நம்பவைத்தார். அந்த மாதிடம் இருந்து இதுவரை $128,151 மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.
$453,600 தொடர்பான 20 ஏமாற்றுக் குற்றங்களைச் செய்ததாக லோ ஒப்புக்கொண்டார்.
இன்று வியாழக்கிழமை (மார்ச் 31) அவருக்கு நான்காண்டு, நான்கு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை விதிப்பதில் இதர 57 குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.


