உக்ரேன் போர் ஆசியாவில் பாதக விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார்.
அதோடு, சட்டம், ஒழுங்கு, அமைதிக்கான அனைத்துலக கட்டொழுங்கையும் அது சிதைத்து விட்டதாக திரு லீ புதன்கிழமை குறிப்பிட்டார்.
"உக்ரேன் நெருக்கடி காரணமாக உலக பலதரப்பு கட்டொழுங்கு முறையும் சேதப்பட்டுவிட்டது.
"வாழ்வாதாரத்திற்கு உலகமயத்தைச் சார்ந்து இருக்கின்ற சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகளைப் பொறுத்தவரை உக்ரேன் நெருக்கடி கவலை தரும் நிலவரமாக இருக்கிறது," என்று பிரதமர் குறிப்பிட்டார்.
வாஷிங்டனில் செயல்படும் 'வெளியுறவு மன்றம்' என்ற சிந்தனைச் சிற்பிகள் அமைப்பு ஏற்பாடு செய்த ஒரு மணிநேர கலந்துரையாடலில் பேசிய பிரதமர், ரஷ்யா தன் பக்கத்து நாடான உக்ரேனை ஆக்கிரமித்ததால் சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசியாவுக்கு எப்படி எல்லாம் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதை விளக்கினார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனை செவ்வாய்க்கிழமை பிரதமர் சந்தித்தார்.
பிறகு இருவரும் ரஷ்யாவின் செயலால் ஏற்பட்டுள்ள கவலைகளை வெளிப்படுத்தினர்.
வாஷிங்டன் டிசியில் மேலும் ஒரு நாள் பயனுள்ள ஒரு நாளாக அமைந்ததாக பிரதமர் லீ சியன் லூங் ஃபேஸ்புக்கில் கூறினார்.
வெளியுறவு மன்ற கலந்துரையாடலை முடித்துக்கொண்டு பிரதமர், அமெரிக்க தலைநகரம் சென்று நாடாளுமன்ற நாயகர் நான்சி பெலோசியை சந்தித்தார்.
நாடாளுமன்ற இதர உறுப்பிர்களைத் தான் சந்தித்ததாகவும் பிரதமர் ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டார். மத்திய வங்கியின் தலைவர் ஜோர்மி போவெல், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவான் ஆகியோருடன் நல்லமுறையில் பலவற்றையும் தான் விவாதித்ததாகவும் திரு லீ தெரிவித்தார்.
அமெரிக்க பயணத்தின் அடுத்த கட்டமாக திரு லீ நியூயார்க் செல்கிறார்.

