கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் கொவிட்-19 காரணமாக ஒரு குழந்தை இறந்துவிட்டது என்றும் அதுபற்றி வேண்டுமென்றே அறிவிக்காமல் இருந்து விட்டார்கள் என்றும் சிங்கப்பூரரான ஒரு மாது சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் தெரிவித்தார்.
அதுபற்றி புலன்விசாரணை நடத்தப்பட்டது. தனக்குக் கொஞ்சம் பழக்கமான ஒருவர் கூறியதைக் கேட்டு இட்டுக்கட்டி அந்த 47 வயது மாது, அப்படி ஒரு தகவலைத் தெரிவித்தார் என்பது புலன்விசாரணை மூலம் தெரியவந்தது என்று இணையவழி பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித் திறத்திற்கும் எதிரான பாதுகாப்புச் சட்ட அலுவலகம் (பொஃப்மா) அறிக்கை ஒன்றில் நேற்று குறிப்பிட்டது.
அந்தச் செய்தி பொய், அதனால் பொது நலன் பாதிக்கும் வாய்ப்பு உண்டு என்பது தெரிந்து அல்லது அப்படி நம்பும் அளவுக்குக் காரணம் இருக்கிறது என்பது தெரிந்து அந்த மாது அப்படிக் கூறி இருக்கிறார்.
இதற்காக அவருக்கு நிபந்தனையுடன் கூடிய 24 மாத எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அந்த அலுவலகம் தெரிவித்தது.
நிபந்தனைக் காலத்தில் அவர் மீண்டும் குற்றம் புரிந்தால் அவர் முதலில் செய்த செயலுக்காக அவர் மீது வழக்கு தொடுக்க முடியும்.

