வெள்ளிக்கிழமை நள்ளிரவு (ஏப்ரல் ஒன்றாம் தேதி) தனது எல்லைகளை மலேசியா திறந்தது முதல் நேற்று மாலை நிலவரப்படி 33,000க்கும் அதிகமானோர் சிங்கப்பூர்-மலேசிய எல்லைகளைக் கடந்துள்ளனர். எல்லைப் பயணக் கட்டுப்பாட்டுகள் தளர்வு குறித்த மகிழ்ச்சியில் இரு நாட்டு அரசாங்கங்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் இருவழியாகவும் தரைவழிப் பயணம் மேற்கொண்ட மலேசியர்கள் நேற்று தமிழ் முரசிடம் தெரிவித்தனர்.
தாய்நாட்டுக்குத் திரும்ப முடிந்த சுதந்திரம், மலேசியா தனி நாடாக அடைந்திருந்த சுதந்திரத்திற்கு ஒப்பானது இது ஜோகூரைச் சேர்ந்த 40 வயது சுப்பையம்மா கருதுகிறார். எல்லைத் திறப்புக்கு முன்னதாகத் தமது பிள்ளைகளைக் காண ஒருமுறை மட்டுமே மலேசியாவுக்குத் திரும்பியபோது பல்வேறு சோதனைகளைச் சந்தித்ததாகக் கூறினார் திருமதி சுப்பையம்மா.
மலேசியாவுக்குத் திரும்பியோரில் பலர், முடக்கநிலை தொடங்கிய பிறகு முதன்முறையாகத் தாயகம் திரும்பியுள்ளனர். எதிர்பார்த்ததைவிட பயணக் கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்பட்டது குறித்து மகிழ்ச்சியுடன் இருப்பதாகக் கூறிய ஜோகூரைச் சேர்ந்த 32 வயது ரேகவன் அருணாசலம் கிருமிப் பரவலால் இங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த மலேசியர்கள் பட்ட வலி கொஞ்ச நஞ்சமல்ல எனக் கருதுகிறார்.
"பலர் வேலை இழந்தும் வீடு திரும்ப இயலாத நிலையில் இருந்ததைக் கண்டேன்," என்றார் அவர். நடமாட்டக் கட்டுப்பாடுகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென அறிவிக்கப்பட்டபோது உணர்ந்த குழப்பத்தை நினைவுகூர்ந்த ரேகவன், தாம் இப்போது நிம்மதியுடன் தாய்நாடு திரும்புவதாகக் கூறினார்.
உற்பத்தித் துறையில் ஆய்வுக்கூடத்தில் வேலை செய்யும் 27 வயது விஜயா ஆறுமுகம், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் தமது குடும்பத்தைக் காணப்போவதாகத் தெரிவித்தார். விரைவில் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே எப்போதும்போல போக்குவரத்து இயங்கவேண்டும் என்று அவர் கூறினார்.
எந்தத் திட்டமும் இல்லாமல் நேற்று காலையே ஜோகூருக்குத் திரும்ப முடிவுசெய்த 28 வயது விஜயலட்சுமி, தமது குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சியைத் தரப்போவதாகவும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு இங்கு வந்து உற்பத்தித் துறையில் இயந்திரம் இயக்குநபவராகப் பணிபுரியும் குமார் விஜயா, முதன்முதலாகப் பயணக் கட்டுப்பாடுகள் நடப்புக்கு வந்த பிறகு மலேசியா திரும்புவதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். துப்புரவுப் பணி மேலதிகாரியான 40 வயது விஷ்ணு, தமது அண்ணனின் இறுதிச் சடங்கிற்குச் செல்லப்போவதாகத் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் உணவுக்கடை ஒன்றில் நிர்வாகியாகப் பணியாற்றப்போகும் 26 வயது புவித்ரா தேவி, தாம் சிங்கப்பூர் வரும் வேளையில் புதிய கட்டுப்பாட்டுத் தளர்வு சரியான நேரத்தில் வந்துள்ளதாகக் கூறினார். தனிமை உத்தரவு தற்பொழுது தேவை இல்லாததால் தாம் வேலை பார்க்கப்போகும் நிறுவனம் தம்மை முன்கூட்டியே வரும்படி கேட்டுக்கொண்டுள்ளதாகவும் குமாரி புவித்ரா குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு ஏழே மணிநேரத்தில் ஜோகூர் கடற்பாலம், துவாஸ் பாலம் ஆகியவற்றின் வாயிலாக 11,000க்கும் அதிகமானோர் தரைவழி மலேசியாவிற்குற் சென்றனர். நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கெல்லாம் பல்வேறு சிங்கப்பூர்-மலேசிய எல்லைப் பகுதிகளில் பலர் வரிசையில் காத்திருக்கத் தொடங்கியதாக குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்தது.
நிலைமைக்கு ஏற்றவாறு வாகனங்களுக்கான தடங்களையும் மோட்டார் சைக்கிள்களுக்கான தடங்களையும் மாற்றி அமைக்கவேண்டி இருந்ததாக அதிகாரிகள் கூறினர்.
கூடுதல் செய்தி: ஹர்ஷிதா
பாலாஜி
கி. ஜனார்த்தனன்


