சிங்கப்பூர்-மலேசியா தரைவழி எல்லைகள் ஈராண்டுகளுக்குப் பிறகு முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இங்குள்ள மலேசியர்கள் குறிப்பாக உட்லண்ட்ஸ் பகுதியைச் சேர்ந்த மலேசியர்கள் பலர் ஜோகூர் பாருவிற்குத் திரும்பியுள்ளனர். ஜோகூர் சென்று பிரபல கடைகளில் சாப்பிட்டு மகிழ சிங்கப்பூரர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இதனால், தங்களுடைய வருவாய் 30 விழுக்காடு வரை குறைந்திருப்பதாக உட்லண்ட்சில் உள்ள சில உணவங்காடிக்காரர்களும் சில்லறை விற்பனையாளர்களும் தெரிவித்தனர்.
எனினும், எதிர்வரும் மாதங்களில் மலேசிய ஊழியர்கள் அன்றாடம் சிங்கப்பூருக்கு வந்துசெல்லும்போது தங்களுக்கு வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கும் என நம்புவதாக உட்லண்ட்ஸ் பகுதியைச் சேர்ந்த 18 கடைக்காரர்களில் பலரும் நம்பிக்கை தெரிவித்தனர் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நேற்று குறிப்பிட்டது.
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே வெள்ளிக்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி ஏறத்தாழ 33,700 பேர் பயணம் செய்ததாக குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் முன்னதாகத் தெரிவித்திருந்தது. அவர்களில் 80 விழுக்காட்டிற்கும் அதிகமானோர், அதாவது 27,600 பேர், சிங்கப்பூரிலிருந்து ஜோகூருக்குப் புறப்பட்டனர்.
ஜோகூர் திரும்பியோரில் பெரும்பாலானோர் மலேசியர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி, துவாஸ் இரண்டாம் இணைப்புப் பாலம், உட்லண்ட்ஸ் கடற்பாலம் வழியாக மேலும் அதிகமானோர் எல்லையைக் கடந்திருப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்சிலிங் மால், மார்சிலிங் லேன் ஃபுட் சென்டர், உட்லண்ட்ஸ் எம்ஆர்டி நிலையம் ஆகியவற்றில் கடை நடத்தும் பலர், கொவிட்-19 தொற்றியது முதல் சிங்கப்பூரில் இருந்து வந்த மலேசியர்களில் அதிக மானோர் இப்போது தங்கள் நாட்டுக்குத் திரும்பி இருப்பதாக தெரிவித்தனர்.


