காலாங் ரிவர்சைட் பூங்காவில் நேற்று காலை வழக்கம்போல ஓட்டத்தில் ஈடுபட்டிருந்த 52 வயது திரு ஆங், வீடு திரும்பாமல் மருத்துவமனைக்குச் செல்ல நேரிட்டது.
காலை நேர ஓட்டத்தின்போது அவ்வப்போது அவர் ஐந்தாறு நீர்நாய்களைப் பார்த்ததுண்டு. ஆனால் நேற்று 30 நீர்நாய்களை ஒருசேரக் கண்டதும் உற்சாகமடைந்த அவர், அவற்றைக் காணொளி எடுப்பதற்காகப் பின்தொடர்ந்தார். இரண்டு மீட்டர் தொலைவில் இருக்கிறோம் என்று நினைத்திருந்தவருக்கு திடீர் அதிர்ச்சி. முதிர்ந்த நீர்நாய் ஒன்று சட்டென்று அவரைத் தாக்கியது.
அசையாமல் நின்றால் அது தன்னை ஒன்றும் செய்யாது என்ற நினைப்பிலும் மண்விழுந்தது. அவரது காலைப் பதம்பார்த்தது நீர்நாய்.
பின்னர் அருகில் இருந்த கழிப்பறையில் காலில் வழிந்த ரத்தத்தைக் கழுவிக்கொண்டு ராஃபிள்ஸ் மருத்துவமனைக்குச் சென்றார் ஆங். ஊடுகதிர்ச் சோதனை நடத்திய மருத்துவர் டெட்டனஸ் தடுப்பூசியும் போட்டதாகக் கூறினார் அவர். வழக்கமாகக் குடும்பத்தினரிடம் காட்டு விலங்குகளுக்கு அருகில் செல்லக்கூடாது என்று அறிவுரை சொல்லும் தானே உற்சாகத்தில் செய்வதறியாது நீர்நாய்களுக்கு அருகே சென்றதை அவர் நினைவுகூர்ந்தார்.
'ஏக்கர்ஸ்' அமைப்பின் இணைத் தலைமை நிர்வாகி கலைவாணன் பாலகிருஷ்ணன், குட்டிகளுடன் இருக்கும் நீர்நாய்கள் மிகவும் எச்சரிக்கையோடு இருக்குமென்றார்.

