விடுமுறையைக் கழிக்க சிங்கப்பூருக்கு வரும் குறுகியகால வருகையாளர்கள் விரைவில் ஓர் இலவச சலுகையைப் பெற்றுக்கொள்ளவிருக்கின்றனர்.
சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் சலுகைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இலவச அனுபவத்திற்கான சலுகைப் பட்டியல் தயாரிக்கப்படுவதாகவும் அதிலிருந்து ஏதாவது ஒன்றை சுற்றுப் பயணிகள் தெரிவுசெய்யலாம் என்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
இத்திட்டம் எப்போது நடைமுறைக்கு என்ற தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. இன்று நடைபெறவிருக்கும் கழகத்தின் சுற்றுப்பயணத் துறைக் கருத்தரங்கில் மேல்விவரங்கள் வெளியிடப்படும் என்று தெரிகிறது.
சென்ற மாதம் 17ஆம் தேதி இந்தத் திட்டத்துக்கான நிர்வாக ஆதரவு தொடர்பில் ஏலக்குத்தகை விடுக்கப்பட்டது. நுழைவுச் சீட்டுகள் வழங்குதல், அவற்றுக்கான முன்பதிவை நிர்வகித்தல், சலுகையாக வழங்கப்படும் அனுபவங்களை நிர்வகித்தல், வாடிக்கையாளர் ஆதரவு போன்றவற்றுக்கான ஏலக்குத்தகை அது.
சிங்கப்பூரைத் தங்கள் சுற்றுப்பயணத்துக்குத் தெரிவுசெய்த பயணிகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக இச்சலுகைக்கு ஏற்பாடு செய்யப்படுவதாக சிங்கப்பூர் சுற்றுப்பயணக் கழகம் கூறியது. அதேநேரத்தில் சிங்கப்பூரை நன்றாகச் சுற்றிப்பார்க்க அவர்களை ஊக்குவிப்பதும் நோக்கம்.
திட்டத்தின் அடுத்தடுத்த கட்டங்களில், பயணிகள் இங்கு செலவிடுவதை ஊக்குவிக்கும் வகையில் மேலும் சில சலுகைத் திட்டங்களும் அறிவிக்கப்படக்கூடும்.
சலுகைத் திட்டத்துக்குப் பயணி தகுதிபெறுகிறாரா என்பதைக் கழகம் உறுதிசெய்யும் என்றும் இந்தச் சலுகைத் திட்டம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சலுகைத் திட்டம் பற்றிய தகவல்களை பஹாசா இந்தோனீசியா, சீனம், கொரிய மொழி, ஜெர்மானிய மொழி, தாய், ஜப்பானிய மொழி, வியட்னாமிய மொழி ஆகியவற்றிலும் மொழிபெயர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கொவிட்-19 நோய்ப் பரவலுக்கு முன்னர், சிங்கப்பூருக்கு ஆக அதிக எண்ணிக்கையில் வருவோர் பட்டியலில் சீனாவும் இந்தோனீசியாவும் பல ஆண்டுகளாக முன்னணியில் இருந்துவந்துள்ளன.
கொவிட்-19க்குப் பிறகு சுற்றுப்பயணிகளின் வருகையும் அவர்கள் இங்கு செலவிடும் தொகையும் வெகுவாகக் குறைந்தது.
சென்ற ஆண்டு 330,000 வெளிநாட்டு பயணிகள் சிங்கப்பூருக்கு வந்தனர். அவர்கள் இங்கு ஏறக்குறைய 1.9 பில்லியன் வெள்ளியைச் செலவிட்டனர்.
ஆனால் 2019ஆம் ஆண்டு இங்கு வந்தோர் எண்ணிக்கை 19.1 மில்லியனுக்கும் அதிகம். அவர்கள் சிங்கப்பூரில் 27.7 பில்லியன் வெள்ளியைச் செலவிட்டனர்.
சிங்கப்பூர் அண்மையில் அதன் எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியிருப்பதால் இனி இங்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் உயரும் என்று நம்பப்படுகிறது.

