மரின் பரேட் பொது நூலகமும் மத்திய பொது நூலகமும் புதுப்பிப்புப் பணிகளுக்காக மூடப்படவிருக்கின்றன.
மரின் பரேட் பொது நூலகம் மே மாதம் 9ஆம் தேதியில் இருந்து 2025ஆம் ஆண்டுவரை மூடப்பட்டிருக்கும். தேசிய நூலக வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
விக்டோரியா ஸ்ட்ரீட்டில் அமைந்துள்ள மத்திய பொது நூலகம் ஜூன் 13ஆம் தேதியில் இருந்து அடுத்த ஆண்டு முற்பாதிவரை மூடப்பட்டிருக்கும்.
இவ்விரு பொது நூலகங்களும் மூடப்பட்டிருக்கும் காலத்தில் பொதுமக்கள் அருகில் உள்ள மற்ற நூலகங்களுக்குச் செல்லலாம். மத்திய பொது நூலகத்துக்கு வழக்கமாகச் செல்வோர் தோ பாயோ பொது நூலகம், கேலாங் ஈஸ்ட் பொது நூலகம், ஹார்பர்ஃபிரண்டில் உள்ள நூலகம் போன்றவற்றுக்குச் செல்லலாம் என்று வாரியம் ஆலோசனை கூறியது.
வாரியத்தின் புதிய சேவையான 'கிரேப்-அன்-கோ' போன்றவற்றையும் பயன்படுத்த பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
இந்த புதிய முன்னோடித் திட்டத்தின்கீழ், நூலகத்தில் இருந்து இரவல் பெறும் புத்தகத்துடன் சிறப்பு வாயில் வழியே செல்லும்போது தானியக்கமுறையில் அது பதிவாகிவிடும். மே 18ஆம் தேதி தொடங்கும் இத்திட்டத்தின் மூலம் காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை நூல்களை இரவல் பெறலாம்.
மத்திய பொது நூலகத்தின் அடித்தளம் ஒன்று புதுப்பிக்கப்படும் வேளையில், ஐந்தாம் தளத்தில் 'கிரேப்-அன்-கோ' முறையில் நூல்களை இரவல் பெறலாம். ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் என நான்கு மொழிகளிலும் பெரியவர்களுக்கான ஏறத்தாழ 5,000 நூல்களை இரவல்பெற முடியும்.
தேசிய நூலக வாரியக் கட்டடத்தில் முன்பதிவு செய்யப்பட்ட நூல்களை இரவல் பெற்றுக்கொள்ளவும் அவற்றை மீண்டும் திருப்பித்தரவும் ஏதுவாக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய சேவை முகப்பு அமைக்கப்பட்டிருக்கும்.
இந்நிலையில், மரின் பரேட் பொது நூலகத்துக்கு வழக்கமாகச் செல்வோர் கேலாங் ஈஸ்ட் பொது நூலகம், பிடோக் பொது நூலகம், தெம்பனிஸ் வட்டார நூலகம் ஆகியவற்றுக்குச் செல்லலாம் என்று வாரியம் ஆலோசனை கூறியுள்ளது.
மே மாதத்தில் இருந்து 24 மணி நேரமும் செயல்படக்கூடிய புத்தக இரவல் முகப்பு அமைக்கப்பட்டிருக்கும் என்று தேசிய நூலக வாரியம் தெரிவித்தது.