கொவிட்-19 பாதிப்பிலிருந்து சுற்றுலாத் துறை மீண்டுவர $500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பயணிகளை மீண்டும் சிங்கப்பூருக்கு ஈர்க்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.
இன்று இடம்பெற்ற சுற்றுலாத் துறை மாநாட்டில் வர்த்தகத், தொழில் துணையமைச்சர் அல்வின் டான் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.
அனைத்துலக சுற்றுலாத் துறை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப சில ஆண்டுகள் பிடிக்கும் என்றார் திரு டான். இந்நிலையில், வெளிநாட்டுப் பயணிகளை ஈர்க்க சிங்கப்பூர் சுற்றுலாத் துறை இப்போதே ஆயத்தமாக வேண்டும் என்றார்.
மற்ற நாடுகளில் இல்லாத சுற்றலாத் தளங்கள், கண்கவர் அம்சங்கள், வசதிகள் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் சுற்றுப்பயணிகளைச் சிங்கப்பூருக்கு ஈர்க்க சிங்கப்பூர்ப் பயணத்துறை திட்டமிட்டுள்ளது.
அடுத்த சில வாரங்களில் சிங்கப்பூர் பெரியளவிலான நிகழ்ச்சிகளை ஏற்றுநடத்தவுள்ளது. சிங்கப்பூர் அனைத்துலகத் தண்ணீர் வாரம், சுற்றுச்சூழல் மாநாடு, ஆசியடெக் எக்ஸ் போன்ற நிகழ்ச்சிகளில் கிட்டத்தட்ட 25,000 பேர் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.


