மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட லாரி ஒன்றில் துவாஸ் சோதனைச் சாவடி வழியாக சிங்கப்பூருக்கு கடத்திவரப்பட்ட மலைப்பாம்புகள் இரண்டை (படம்) அதிகாரிகள் கைப்பற்றினர். இம்மாதம் ஏழாம் தேதி அவை உயிருடன் பிடிபட்டன.
சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் அதிகாரிகள் சிமெண்ட் ஏற்றிச்செல்லும் லாரியில் இருந்த 'ஸ்டைரஃபோம்' பெட்டியில் மறைத்துக் கொண்டுவரப்பட்ட மலைப்பாம்புகளைக் கண்டுபிடித்தனர்.
லாரி ஓட்டுநர் முதலில் அந்தப் பெட்டியில் உணவுப் பொருள் இருப்பதாகக் கூறினார்.
பிறகு தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் உயிருள்ள பாம்புகள் இருப்பதாக ஒப்புக்கொண்டார்.
உரிய இறக்குமதி அனுமதி இல்லாததால் அந்த ஓட்டுநர் தேசியப் பூங்காக் கழகத்திடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டார்.
பாதுகாக்கப்பட்ட வகையைச் சேர்ந்த அந்த இரண்டு மலைப்பாம்புகளும் முறையே 4.8 மீட்டர், 3.8 மீட்டர் நீளம் கொண்டவை.
உரிய அனுமதி இன்றி இவ்வாறு பாதுகாக்கப்பட்ட உயிரினங்களை இறக்குமதி செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஈராண்டு வரையிலான சிறைத்தண்டனையோ, 50,000 வெள்ளி வரையிலான அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.
இத்தகைய சட்டவிரோதச் செயல்களால் உயிரினப் பன்முகக் கட்டமைப்பு பாதிக்கப்படுவதுடன் மோசமான சுகாதாரச் சிக்கல்களும் ஏற்படக்கூடும். உகந்த சூழலில் அல்லாமல் கடத்தப்படும் உயிரினங்கள், தேவையின்றி சிரமத்துக்கு உள்ளாவதுடன், அவை மாண்டுபோகவும் நேரிடலாம்.
பொதுமக்கள் வனவிலங்குகளை வாங்கவோ செல்லப் பிராணிகளாக வைத்திருக்கவோ கூடாது என்று தேசியப் பூங்காக் கழகம் நினைவுறுத்தியது. பறவைகள், பூச்சிகள் உள்ளிட்ட உயிருள்ள வனவிலங்குகளை உரிய அனுமதி இன்றி சிங்கப்பூருக்குள் கொண்டுவர வேண்டாம் என்றும் நினைவூட்டப்பட்டது.