சிங்கப்பூர், கொவிட்-19க்குப் பிந்திய சூழலுக்குப் பிறகு நீரிழிவு போன்ற நீண்டகால முற்றிய நோய்களை வெற்றிகரமான முறையில் சமாளிக்கவேண்டிய தேவை இருக்கிறது.
இது சிங்கப்பூர் எதிர்நோக்கும் அடுத்த சவால் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்து இருக்கிறார். இந்நிலையில், 'நலமிக்க எஸ்ஜி' இயக்கத்தில் ஒருமித்த கவனம் செலுத்தவேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.
சிங்கப்பூரின் ஈசூன் சமூக மருத்துவமனை வளாகத்திற்குள் அமைந்துள்ள தேசிய சிறுநீரக அறநிறுவனத்தின் ரத்த சுத்திகரிப்பு நிலையத்தை அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்து உரையாற்றிய திரு ஓங், நோய் பெருகும்போது இடம்பெறவேண்டிய மிக முக்கிய தேசிய சுகாதாரப் பராமரிப்பு அணுகுமுறை யைப் பற்றி விளக்கினார்.
அப்படிப்பட்ட ஒரு நிலையில், மருத்துவமனையை மையமாகக் கொண்ட பராமரிப்பு முறையிலிருந்து விலகி நோயாளிகளை மையமாகக்கொண்ட வருமுன் காக்கும் முன்மாதிரி முறைக்கு நாடு மாறிக்கொள்ளும் என்றும் இதுவே முக்கிய உத்தியாக இருக்கும் என்றும் திரு ஓங் கூறினார்.
இதற்கு வகைசெய்யும் நலமிக்க எஸ்ஜி இயக்கம் சென்ற மாதம் நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சின் வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது அறிவிக்கப்பட்டது.
நோய்களை முன்னதாகவே கண்டறிந்து கூடுமானவரை மருத்துவமனையை நாடாமல் மக்களை ஆரோக்கியமானவர்களாகக் கட்டிக்காப்பதில் தனியார் மருத்துவர்கள், குடும்ப மருத்துவர்கள், சமூகத்தினர் ஆகியோரை அதிக அளவில் பங்காற்றும்படி செய்வது இந்த இயக்கத்தின் நோக்கம். நீரிழிவு நோயால் சிறுநீரகம் செயல் இழந்துவிடக்கூடிய நோயாளிகள் சிங்கப்பூரில் அதிகம்.
நீரிழிவு போன்ற பிரச்சினைகளைப் பொறுத்தவரை தனிப்பட்டவர்களின் உணவுப் பழக்கவழக்கங்களும் முன்னுரிமைகளும் முக்கியமானவை. ஆகையால், குடும்பங்களுக்கு நம்பிக்கைமிக்க சுமார் 2,000 தனியார் மருத்துவர்களைத் திரட்டும் ஓர் இயக்கம் இடம்பெற்றால் மனப்போக்குகளை மாற்றுவதில் நல்ல பலன் ஏற்படும் என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் 40 வயதும் அதற்கும் அதிக வயதுள்ள சிங்கப்பூர்வாசிகளுக்கு சுகாதார அமைச்சு அழைப்பு விடுக்கும். தாங்கள் விரும்பும் தனியார் மருத்துவர் ஒருவரைப் பார்க்க வாய்ப்பளிக்கும் தேசிய செயல்திட்டம் ஒன்றில் அவர்கள் கலந்துகொள்ளலாம்.
நோயாளிகளுக்கு உதவும் வகையில் ஆக்ககரமான ஊக்குவிப்புகளைப் பற்றி அரசாங்கம் சிந்திக்க வேண்டி இருக்கும் என்றும் திரு ஓங் குறிப்பிட்டார். குறைவான சுகாதாரப் பராமரிப்பு காப்புறுதிக் கட்டணம், உணவைக் கண்காணிப்பதற்கான பற்றுச்சீட்டுகள் போன்ற சாத்தியமான ஊக்குவிப்பகளைப் பற்றி அமைச்சர் மேலோட்டமாகக் குறிப்பிட்டார்.
நலமிக்க எஸ்ஜி இயக்கத்திற்கான விரிவான திட்டம் இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் வெள்ளை அறிக்கையில் அறிவிக்கப்படும். அதை நாடாளுமன்றம் விரிவாக விவாதிக்கும்.
அமைச்சர் ஓங்: நீரிழிவு போன்ற முற்றிய நோய்களை வெற்றிகரமாக சமாளிக்கவேண்டும்

