பெருவிரைவு ரயில்களில் கூட்டம் அதிகம் இல்லாதிருந்தாலும் பயண நேரம் குறைவாக இருந்தாலும் மக்கள் மீண்டும் தங்கள் வேலையிடங்களுக்குச் சென்று வேலை செய்வதில் கூடுதல் ஈடுபாடு காட்டலாம். நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்று இதைத் தெரிவித்துள்ளது.
'டிராவல் பிஹேவியர் அண்ட் பீப்பள்' எனும் 'பயணப் பழக்கங்களும் சமூகமும்' என்ற அந்த ஆய்வின் முடிவுகள் கடந்த ஜனவரி மாதம் ஹாங்காங்கின் சஞ்சிகை ஒன்றில் வெளியிடப்பட்டன.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் சிவில், சுற்றுச்சூழல் பொறியியல் பள்ளியின் துணைப் பேராசிரியர் வோங் யீக் டியூவும் பட்டக்கல்வி இறுதியாண்டு மாணவரான முகம்மது சோஃபியான் தாஹிரும் இைணந்து ஆய்வை நடத்தினர். 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் தேதிக்கும் சென்ற ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் அவர்கள் ரயில் பயணம் மேற்கொள்ளும் 574 பேரைக் கொண்டு ஆய்வை நடத்தினர்.
வேலையிடத்திற்குச் சென்று வேலை செய்வது குறித்து முடிவெடுக்க பங்கேற்பாளர்கள் கருத்தில்கொள்ளும் அம்சங்களில் ரயிலில் சேரும் கூட்டம் 12.8 விழுக்காடு பங்கு வகிப்பது ஆய்வில் தெரியவந்தது. அதற்கு அடுத்தபடியாக பயண நேரம் 10.7 விழுக்காடு பங்கு வகிக்கிறது.
வேலையிடத்திற்குச் செல்வது குறித்து முடிவெடுக்கும்போது இவற்றைத் தாண்டி பல்வேறு அம்சங்களை மக்கள் கருத்தில்கொள்வர் என்பதைப் பேராசிரியர் வோங் யீக் டியூவும் திரு முகம்மது சோஃபியான் தாஹிரும் ஒப்புக்கொண்டனர். எனினும் குறிப்பான இவ்விரு அம்சங்களை ஆராய விரும்பியதாக அவர்கள் கூறினர்.
ஓரிடத்தில் பலர் ஒன்றுகூடி வேலை செய்யும் முறை மாறிவருகிறது. அந்த வகையில் ரயிலில் கூடும் கூட்டம், பயண நேரம் ஆகிய இரண்டு அம்சங்களில்தான் நாளடைவில் அதிக மாற்றங்கள் ஏற்படும் என்று இவ்விருவரும் குறிப்பிட்டனர்.
பயணப் பழக்கங்கள் தொடர்பில் 2017ஆம் ஆண்டு இங்கிலாந்தின் 'யூடபிள்யூஇ' பல்கலைக்கழகம் ஓர் ஆய்வை நடத்தியது. நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வும் அதைப் போன்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

