எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து பல இந்தோனீசிய பயணிகள் மீண்டும் சிங்கப்பூருக்கு வருகை தந்துகொண்டிருக்கின்றனர்.
கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் தொடங்குவதற்கு முன்பு அடிக்கடி சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்ட இந்தோனீசியர்கள் சிலர் கடந்த ஈராண்டுகளாக இங்கு வரவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர்களால் சிங்கப்பூரில் வசிக்கும் தங்களின் உறவினர்களையும் நண்பர்களையும் நேரில் பார்க்கமுடிகிறது.
சிலர் சுற்றிப் பார்ப்பதற்காகவே சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்கின்றனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் இனி தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லாதது போன்ற விதிமுறை தளர்வுகளால் தாங்கள் பெரிதும் பலனடைந்துள்ளதாகப் பயணிகள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தனர்.
சென்ற ஆண்டுகூட சுமார் 33,000 இந்தோனீசியர்கள் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டதாக சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் கூறியது. முன்னதாக நடப்பில் இருந்த 'விடிஎல்' எனும் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப் பாதைக்காக ஆக அதிக விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த ஐந்து நாடுகளில் இந்தோனீசியாவும் ஒன்று என்றும் தெரிவிக்கப்பட்டது.
தளர்த்தப்பட்ட எல்லைக் கட்டுப்பாடுகளின்படி இம்மாதம் முதல் தேதியிலிருந்து 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் மற்றும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டிய அவசியமின்றி சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்ளலாம்.

