கடந்த 2017ஆம் ஆண்டில் போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளான முன்னாள் வழக்கறிஞர் ஒருவர், தாம் கைது செய்யப்பட்டபோது மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரி ஒருவரின் கழுத்தில் கீறினார்.
அந்த 32 வயது ஆடவர், மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளை சாபமிட்டதுடன் அவர்களுடன் போராடினார்.
அவரை ஒருவழியாக கட்டுப்படுத்துவதற்குள் நான்கு அதிகாரிகளுக்குக் காயம் ஏற்பட்டது.
அந்த நேரத்தில் அந்த ஆடவருக்கு எச்ஐவி தொற்று இருந்தது.
அந்த ஆடவரால் கழுத்தில் கீறப்பட்ட அதிகாரி, ஆறு முறை எச்ஐவி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
அவருக்கு எச்ஐவி தொற்று இல்லை எனக் கண்டறியப்பட்டது.
அந்த அதிகாரிக்கு 'ஹெப்பட்டைட்டிஸ் பி' தடுப்பூசி போடப்பட்டது. கல்லீரல் செயல்பாடு, ஹெப்பட்டைட்டிஸ் பி, சி, இதர நோய்கள் உள்ளனவா என்பதைக் கண்டறிய அவர் ரத்தப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.
முன்னாள் வழக்கறிஞருக்கு ஓராண்டு, 22 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
போதைப்பொருள் உட்கொண்டது, போதைப்பொருள் உட்கொள்வதற்கான உபகரணங்களை வைத்திருந்தது, அரசாங்க ஊழியர் தமது பணியைச் செய்யவிடாமல் அவருக்கு வேண்டுமென்றே காயம் விளைவித்தது ஆகிய குற்றங்களை அந்த ஆடவர் ஒப்புக்கொண்டார்.
அவருக்குத் தண்டனை விதிப்பதில் இதுபோன்ற மூன்று குற்றச்சாட்டுகளும் கருத்தில்கொள்ளப்பட்டன. தொற்றுநோய்கள் சட்டத்தின்கீழ், அந்த ஆடவரின் பெயர் வெளியிடப்படவில்லை. ஏனெனில், எச்ஐவி தொற்று உடையோரின் அடையாளத்தை அச்சட்டம் பாதுகாக்கிறது.


