சிங்கப்பூரின் மூன்று இடங்களில் தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் அடுக்குமாடி வீடுகளை வாங்கியிருப்போர் மேலும் காத்திருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டங்கள் முழுமையடைவதற்கு சில மாதங்களே எஞ்சி இருக்கும் நிலையில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தாமதம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
தெம்பனிஸ் கிரீன்கோர்ட், கிளமெண்டி நார்த்ஆர்க், உட்லே ஹில்சைட் ஆகிய திட்டங்களில் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது.
கொவிட்-19 நோய்ப் பரவலால் ஏற்கெனவே தாமதமான இந்தத் திட்டங்கள் முடிவடைய இப்போது மேலும் மூன்று முதல் ஆறு மாதங்கள் பிடிக்கும் என்று கூறப்படுகிறது.
கடைசி நேரத்தில் இத்தகைய அறிவிப்பு வந்திருப்பது எரிச்சலூட்டுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய 25க்கும் அதிகமான உரிமையாளர்கள் குறிப்பிட்டனர்.
வீட்டுக்குப் பதிவு செய்தபோது எதிர்பார்க்கப்பட்ட தேதியில் இருந்து ஒன்பது முதல் பன்னிரண்டு மாதங்கள் கழித்தே வீட்டுச் சாவி கையில் கிடைக்கும் என்பதை அவர்கள் சுட்டினர்.
இந்தத் தாமதம் தங்களது திட்டங்களை மிகவும் பாதிப்பதாகப் பலரும் கூறினர்.
எடுத்துக்காட்டாக, இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் உட்லே ஹில்சைட் அடுக்குமாடி வீட்டின் சாவி கிடைத்தால் புதுப்பிப்புப் பணிகளுக்குப் பிறகு ஆண்டு இறுதியில் புது வீட்டில் குடியேற நினைத்திருந்தார் திருவாட்டி ஜோயெல் லோ.
அடுத்த ஆண்டு புதிய வீட்டுக்கு அருகில் இருக்கும் தொடக்கப் பள்ளிக்குத் தனது மகனை நடத்தி அழைத்துச் செல்வது இவரின் திட்டம். ஆனால் அடுத்த ஆண்டு மத்தியில்தான் புதிய வீட்டில் குடியேற முடியும்.
15 மாதக் கைக்குழந்தையை வைத்திருக்கும் இவருக்கு இந்தக் கடைசி நேர அறிவிப்பு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்பட்டது.
தெம்பனிஸ் கிரீன்கோர்ட்டில் 2,1192 வீடுகளும், கிளமெண்டி நார்த்ஆர்க்கில் 1,179 வீடுகளும், உட்லே ஹில்சைடில் 1,355 வீடுகளும் இவ்வாறு தாமதமாக ஒப்படைக்கப்பட இருக்கின்றன.
இதுகுறித்து வீவக மார்ச் 31ஆம் தேதி மின்னஞ்சல் அனுப்பியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள் கூறினர்.
மின்னஞ்சலில், கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்காக 2020ல் இரண்டு மாதங்கள் நடப்பில் இருந்த திட்டம், அதைத் தொடர்ந்து மலேசியா ஈராண்டாக அதன் எல்லைகளை மூடியிருந்தது ஆகியவற்றால் கட்டுமானப் பொருள்கள் விநியோகம் தடைபட்டதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் குறிப்பிட்டிருந்தது.
2021ல் தெற்காசிய நாடுகளில் இருந்து வரும் கட்டுமான ஊழியர்களுக்குச் சில மாதங்களாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததையும் அது சுட்டியிருந்தது.
வீட்டுத் திட்டங்கள் மேலும் தாமதம் அடையாமல் தவிர்ப்பதற்கு ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் குறிப்பிட்டது.

