கொவிட்-19 கிருமிப் பரவலின்போது இணையத் தாக்குதல்களும் அதிகரித்த நிலையில், நம்பகமான இணையப் பாதுகாப்புச் சேவை குறித்த அக்கறைகளும் எழுந்தன.
இதற்குத் தீர்வுகாணும் வகையில், சிங்கப்பூரின் இணையப் பாதுகாப்பு அமைப்பு நேற்று புதிய உரிம நடைமுறையைத் தொடங்கியுள்ளது.
இதன்கீழ், வர்த்தக நிறுவனங்கள் இணைய ஊடுருவலுக்கு உள்ளாகும் சாத்தியம் குறித்தும் அவற்றின் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புகளில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றனவா என்பதையும் கண்காணிக்கும் சேவையை வழங்குவோர், அதற்கான உரிமத்துக்கு விண்ணப்பிக்க வேண்டியது கட்டாயம்.
வரும் அக்டோபர் 11ஆம் தேதி அதற்கான இறுதி நாள் என்று தெரிவிக்கப்பட்டது.
வாடிக்கையாளர் நலனைப் பாதுகாப்பதும் நம்பகமான இணையப் பாதுகாப்புச் சேவை வழங்குவோரை அடையாளம் காண உதவுவதும் நோக்கம்.
உலக அளவில் இத்தகைய உரிமத்தை அறிமுகப்படுத்தும் முன்னிலை நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று எனக் கருதப்படுகிறது.
ஈராண்டுக்கான உரிமம் பெற விண்ணப்பக் கட்டணம் தனிமனிதர்களுக்கு 500 வெள்ளி; நிறுவனங்களுக்கு ஆயிரம் வெள்ளி.
அக்டோபர் 11ஆம் தேதிக்குப் பிறகு உரிமத்துக்கு விண்ணப்பிக்காமல் இணையப் பாதுகாப்புச் சேவை வழங்குவது கண்டறியப்பட்டால், 50,000 வெள்ளி வரையிலான அபராதமோ ஈராண்டு வரையிலான சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.
விண்ணப்பித்தோருக்கு உரிமங்கள் வழங்கப்பட்ட பிறகு, இணையப் பாதுகாப்புச் சேவைக் கட்டுப்பாட்டு அலுவலகத்தின் இணையத்தளத்தில் அத்தகையோரின் பட்டியல் வெளியிடப்படும்.

