சிங்கப்பூரில் செயல்படும் 'எஸ்இசி' எனும் ஆய்வு நிலையத்தின் ஆய்வாளர்கள் நீடித்த நிலைத்தன்மை கொண்ட மாற்று உணவை நுண்பாசி அடிப்படையிலான புரதங்களில் இருந்து தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அது முப்பரிமாண முறையில் அச்சிடப்படக்கூடியதாக இருக்கக்கூடும்.
டோஃபு தயாரிக்கையில் கிடைக்கும் துணைப் பொருள்களான சோயா மோர், சோயா விழுது ஆகியவற்றைப் பயன்படுத்தி நுண்பாசிகளை வளர்ப்பது குறித்து ஆராயப்படுகிறது.
பின்னர் அந்த நுண்பாசிகளின் புரதங்களில் இருந்து உணவுப் பொருள்கள் தயாரிக்கப்படும். திட்டத்தின் தலைவர் டாக்டர் ஐரிஸ் ஹேபர்கோர்ன் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் இருக்கும் டோஃபு தொழிற்சாலைகள் ஒவ்வொன்றிலும் அன்றாடம் 200 டன் வரையிலான சோயா மோர் தயாரிக்கப்படுவதாகக் கூறிய அவர், இத்தகைய பொருள்கள் தற்போது பயனற்ற கழிவுகளாக வீணாவதைக் குறிப்பிட்டார்.
இதே திட்டத்தில் பணியாற்றும் பேராசிரியர் அலெக்ஸாண்டர் மேதிஸ், நுண்பாசிகளில் 70 விழுக்காடு வரை புரதங்கள், வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் உள்ளிட்டவை இருப்பதாகக் கூறினார்.
சுவிட்சர்லாந்தின் இடிஎச் ஸூரிக் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், 'ஏஸ்டார்' ஆய்வு நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து சிங்கப்பூரின் தேசிய ஆய்வு அறநிறுவனம் இந்த ஆய்வை மேற்கொள்கிறது.
ஆய்வாளர்கள் பாசிப் பருப்பின் புரத விழுதில் நுண்பாசிகளை வளரவிட்டு, முப்பரிமாண அச்சு இயந்திரத்தின் துணையுடன் அதன் வடிவம், நயம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குறைவான வேளாண் நிலங்கள் உள்ள நகரங்களில் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்ய, புத்தாக்க உணவுக் கட்டமைப்புகள் தேவை என்றார் டாக்டர் ஹேபர்கோர்ன்.
2050ல் உலக மக்கள்தொகையில் 68 விழுக்காட்டினர் நகரங்களில் வசிப்பர் என்று முன்னுரைக்கப்பட்டிருப்பதை அவர் சுட்டினார்.
ஆசியாவில் பயனாளர்கள் இன்னும் பாரம்பரிய முறையிலான புரதங்களை உண்ணவே விரும்புவதால், இத்தகைய நீடித்த நிலைத்தன்மை கொண்ட உணவுப் பொருள்களின் நன்மைகளைப் பற்றி அவர்களிடம் எடுத்துச் சொல்லவேண்டும் என்று நுண்பாசியில் இருந்து சத்துணவு தயாரிக்கும் ஆய்வுத் திட்டக் குழுவினர் கருத்துரைத்தனர்.

