தம்முடன் வேலை பார்த்த 21 வயது பெண்ணின் உடலை முறையற்ற வகையில் வர்ணித்த பிறகு மானபங்கம் செய்த ஆடவருக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தக் குற்றச் செயலை அந்த ஆடவர் 2020ஆம் ஆண்டில் புரிந்தார்.
அரசாங்க அமைப்பு ஒன்றில் பணிபுரிந்த அந்த ஆடவர் இன்னோர் ஊழியரின் முன்னிலையில் அந்தப் பெண்ணை முறையற்ற வகையில் தொட்டார்.
தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தைக் காக்க ஆடவரின் பெயரை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இருவரின் வேலையிடம் பற்றிய விவரங்கள் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.
2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை அப்பெண்ணிடம் அந்த ஆடவர் முறையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பியதாக அரசாங்க வழக்கறிஞர் தியாகேஷ் சுகுமாறன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதை அந்தப் பெண் புறக்கணித்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதியன்று இருவரும் ஒன்றாக வேலை செய்துகொண்டிருந்தபோது அப்பெண்ணை அந்த ஆடவர் தகாத முறையில் தொட்டார்.
அந்தப் பெண் அங்கிருந்து விலகிச் சென்றும் அவரைப் பின்தொடர்ந்த அந்த ஆடவர் மீண்டும் அவரைத் தொட்டார்.
அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் திரும்பவும் அவரை முறையற்ற வகையில் தொட்டார்.
இதுகுறித்து தமது காதலனிடம் தெரிவித்த அப்பெண் போலிசில் புகார் செய்தார்.
பிறகு அப்பெண் பதவி விலகினார்.
அந்த ஆடவரும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1ஆம் தேதியன்று பதவி விலகியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது.

