சிங்கப்பூரில் இயங்கிவரும் தொழில் நிறுவனங்கள் கடந்த ஆண்டு சமூகத்திற்குத் திருப்பி அளித்துள்ளன. குறிப்பாக, கொவிட்-19 பெருந்தொற்றுச் சூழலில் சிறப்பாக செயல்பட்ட நிதி, காப்புறுதி, தகவல் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு இது பொருந்தும்.
தேசிய தொண்டூழிய, கொடை நிலையம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
2017ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க, சமுதாயத்திற்கு நிறுவனங்கள் திருப்பிக் கொடுக்கும் போக்கு கடந்த ஆண்டு 15 விழுக்காடு அதிகரித்தது. ரொக்க நன்கொடை, இலவச சட்ட ஆலோசனை வழங்கும் சேவை, நல்ல செயல்பாடுகளை ஆதரித்துப் பேசுதல் உள்ளிட்ட பல வழிகளில் சமுதாயத்திற்கு நிறுவனங்கள் திருப்பித் தந்தன.
பொருளியலுக்கு கொவிட்-19 சூழல் இடையூறு ஏற்படுத்தினாலும், சமுதாயத்தில் தங்களுடைய பங்கு குறித்து மறுமதிப்பீடு செய்ய வர்த்தகங்களுக்கு அது வாய்ப்பளித்ததாக ஆய்வு கண்டறிந்தது.
கடந்த ஆண்டு மே முதல் செப்டம்பர் வரை நடத்தப்பட்ட அந்த ஆய்வில் 1,014 வர்த்தகங்கள் பங்கெடுத்தன. முக்கால்வாசி வர்த்தகங்கள் கடந்த ஆண்டு குறைந்தது ஒரு விதத்திலாவது சமூகத்திற்குத் திருப்பித் தந்தன.
ரொக்க நன்கொடை, பொருள் நன்கொடை, நிதியாதரவு ஆகியவை நிறுவனங்கள் சமூகத்திற்குத் திருப்பிக் கொடுக்கும் பிரபலமான வழிமுறைகளாக உள்ளன.
வேலைக்கு ஆள் எடுக்கும்போது அனைவரையும் உள்ளடக்கும் சிறந்த வர்த்தக நடைமுறையும் நிறுவனங்களிடையே பிரபலமாக இருந்தது.

