போலி கொவிட்-19 தடுப்பூசி போட்டதால் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட மருத்துவர்
ஏறத்தாழ 15 பேருக்கு போலி கொவிட்-19 தடுப்பூசிகளைப் போட்டதால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள டாக்டர் ஜிக்சன் குவா, 33, குறைந்தது மூவரிடம் ஒரு தடுப்பூசிக்கு $1,000 முதல் $1,500 வரை கட்டணம் விதித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், குறைந்தது 430 பேர் நேரில் வராமல் வேறிடத்திலிருந்து கொவிட்-19 பரிசோதனை செய்ய அவர் அனுமதித்தார்.
இந்த நடைமுறை, அப்போதைய விதிகளுக்கு எதிராக இருந்தது.
இந்த விவகாரம் குறித்து தீர்ப்பளித்துள்ள சிங்கப்பூர் மருத்துவ மன்றம், இத்தகைய குற்றங்கள் மிகவும் கடுமையானவை என்றும் அதிகபட்ச தண்டனையாக டாக்டர் குவா 18 மாதங்களுக்குப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியது. மன்றத்தின் அறிக்கை நேற்று இணையத்தில் வெளியிடப்பட்டது.
அவரது செயல்பாடுகள் பொதுமக்களுக்கு இடர் ஏற்படுத்தியுள்ளதாகவும் மருத்துவத் துறை மீதும் சிங்கப்பூரின் கொவிட்-19 பரிசோதனை ஆற்றல்கள் மீதும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைச் சீர்குலைக்கும்படியானது என்றும் மன்றம் கூறியது. டாக்டர் குவா விதிகளை எப்படி மீறினார் என்பது குறித்த மூன்று உதாரணங்களை மன்றத்தின் இடைக்கால உத்தரவுக் குழு பட்டியலிட்டது.
வாரத்தில் ஏழு நாள்களும் தாம் நீண்ட நேரம் பணியாற்றியதால் ஏற்பட்ட சோர்வு காரணமாக தமது செயல்பாடுகள் கண்ணை மறைத்துவிட்டதாக தமது தற்காப்பு வாதத்தில் டாக்டர் குவா கூறினார்.
மேற்பார்வையின்கீழ் தாம் பணிபுரிய அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்ட அவர், கொவிட்-19 தொடர்பிலான மருத்துவ நடைமுறையிலிருந்து விலகியிருக்கப்போவதாக உறுதியளித்தார்.
டாக்டர் குவா எந்தவொரு நிபந்தனைக்கும் உட்பட்டு நடப்பார் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று உத்தரவுக் குழு கூறியது.

