வங்கி அதிகாரிகள்போலவும் காவல்துறை அதிகாரிகள் போலவும் நடிக்கும் நபர்கள் தொலைபேசியில் அழைத்து ஏமாற்றுவேலையில் ஈடுபடும் போக்கைப் பற்றி காவல்துறை எச்சரித்துள்ளது.
இதில் வங்கி அதிகாரிகள்போல நடிக்கும் நபர்களிடமிருந்து பொதுமக்கள் தொலைபேசி அழைப்பைப் பெறுகின்றனர்.
அழைப்பைப் பெற்றவரின் வங்கிக் கணக்கு தவறாகப் பயன்படுத்தப்பட்டுவிட்டதாகவும் அவர் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் ஏமாற்றுப் பேர்வழி கூறுவார். இத்தகைய அழைப்புகளில் பெரும்பாலும், வெளிநாடுகளில் இருந்து அழைக்கும்போது தோன்றும் +65 எனும் எண்கள் வரும். குறிவைக்கப்பட்டவரின் வங்கிக் கணக்கின் நுழைவு விவரங்கள், ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் போன்றவற்றை அழைப்பவர் வாங்கிக்கொள்கிறார்.
பின்னர் காவல்துறையின் வர்த்தக விவகாரப் பிரிவு என்று கூறிக்கொள்ளும் மற்றொரு ஏமாற்றுப் பேர்வழிக்கு மாற்றப்படுகிறது.
வாட்ஸ்அப்பில் குறிவைக்கப்பட்டவருடன் அவர் தொடர்புகொண்டு, காவல்துறையிடம் புகார் அளிக்கத் தேவைப்படுவதாகக் கூறி புகைப்படம், அடையாள விவரங்கள் போன்றவற்றைப் பெறுகிறார்.
காவல்துறை தங்களை விசாரிப்பதாகக் கூறும் போலிக் கடிதங்கள் ஏமாற்றப்பட்டவர்களுக்கு அனுப்பப்படுகின்றன. தொலைபேசி அழைப்பு, சமூக குறுஞ்செய்தி தளங்கள் போன்றவற்றில், அடையாள அட்டை எண், புகைப்படம் போன்ற விவரங்களை எந்த அரசாங்க அமைப்பும் கேட்காது என்று போலிசார் வலியுறுத்தினர்.

