கொவிட்-19 கிருமிப்பரவலைச் சமாளிப்பதில் அரசாங்கத்தின் முடிவுகள் அனைத்துமே சரியாக இருந்தன என்று சொல்ல இயலாவிட்டாலும், அவ்வப்போது வெளியான தகவல்களின் அடிப்படையில் முடிவுகளை மறுஆய்வு செய்யவும் மாற்றியமைக்கவும் அரசாங்கம் எப்போதும் தயாராக இருந்ததாகப் பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.
கடந்த ஈராண்டில் பல கடினமான முடிவுகளை எடுக்கவேண்டி இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
பொறுத்திருந்து பார்க்க அவகாசமோ, எத்தகைய முடிவெடுக்க வேண்டும் என்ற வழிகாட்டிக் குறிப்போ இல்லாமல் செயல்பட வேண்டியிருந்ததாக அவர் சொன்னார்.
முழுமையான தகவல்கள் கிடைக்காமல் அந்தந்த நேரத்துக்கு எது ஆகச் சிறந்ததோ அதன்படி முடிவுகள் எடுக்கப்பட்டன. முடிவு எடுக்காமல் இருத்தல், எல்லாத் தகவல்களும் வேண்டும் என்று காத்திருத்தல் போன்றவற்றால் சூழல் மேலும் மோசமாகியிருக்கும் என்பதைத் திரு லீ சுட்டினார்.
வருடாந்தர நிர்வாகச் சேவை நியமனம், பதவி உயர்வு நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார். மூத்த பொதுச்சேவை அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இத்தகைய நிகழ்ச்சி நேரடியாக இடம்பெற்றது.
கொவிட்-19 இந்தத் தலைமுறைக்கான நெருக்கடி என்றபோதும் அதன் ஒவ்வொரு கட்டத்திலும் பொதுச் சேவையினர் சிறப்பான முறையில் எதிர்கொண்டதாகவும் அரசியல் தலைவர்களுடன் அணுக்கமாகப் பணியாற்றி நிலைமையை மிகச் சிறப்பாகக் கையாண்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
கொவிட்-19 தொடங்கியபோது மக்களின் உயிரைக் காக்கும் பொருட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன. எல்லைகளை மூடியதுடன் கிருமிப் பரவலைத் தடுக்கும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் அன்றாட பாதிப்பு மிகக் குறைவாக இருந்தபோது நிலைமை மோசமானால் செய்யவேண்டியவை குறித்து திட்டமிடப்பட்டது.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் கிருமிப் பரவலைச் சமாளிக்கும் நடவடிக்கைகள், தேசிய அளவிலான தடுப்பூசித் திட்டம் எனப் பல்வேறு முயற்சிகளில் நிர்வாகச் சேவைப் பிரிவின் தலைவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டு செயல்பட்டனர் என்றார் பிரதமர் லீ.
"தற்போது எது வந்தாலும், சமாளிப்பதற்கு உரிய நம்பிக்கை நம்மிடம் உள்ளது," என்று பிரதமர் லீ குறிப்பிட்டார்.

