லேப்ரடார், அலெக்சாண்டிரா பகுதிகளில் 2025ஆம் ஆண்டுக்குள் நான்கு புதிய பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன.
லேப்ரடார் இயற்கைப் பாதுகாப்புப் பகுதிக்கும் அதைச் சுற்றியிருக்கும் பசுமை வாய்ந்த இடங்களுக்கும் உள்ள தொடர்பை மேம்படுத்த திட்டம் வரையப்பட்டுள்ளது. அதன்கீழ் புதிய பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன.
'லேப்ரடார் நேச்சர் பார்க் நெட்வொர்க்' எனும் லேப்ரடோர் இயற்கைப் பூங்கா கட்டமைப்பின்கீழ் புதிய பூங்காக்கள் அமைக்கப்படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று தெரிவித்தார்.
இந்தப் புதிய கட்டமைப்பு 200 ஹெக்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட நிலத்தில் அமையும். இதில் புதிதாக அமைக்கப்படும் நான்கு பூங்காக்கள், ஏற்கெனவே இருக்கும் ஆறு பூங்காக்கள், லேப்ரடார் இயற்கைப் பாதுகாப்புப் பகுதி உள்ளிட்டவை இடம்பெறும்.
இதன்படி லேப்ரடார் இயற்கைப் பாதுகாப்புப் பகுதியையும் வெஸ்ட் கோஸ்ட் இயற்கைப் பாதுகாப்புப் பகுதியையும் இணைக்க பாசிர் பாஞ்சாங் பூங்கா விரிவுபடுத்தப்படும். அதற்கான பணிகள் இவ்வாண்டு இறுதிக்குள் நிறைவடையும்.
வெஸ்ட் கோஸ்ட் இயற்கைப் பாதுகாப்புப் பகுதி, புதிய லேப்ரடார் இயற்கைப் பாதுகாப்புக் கட்டமைப்பில் இடம்பெறாது.
நான்கு புதிய பூங்காக்களில் முதல் பூங்கா 2024ஆம் ஆண்டுக்குள் அமைக்கப்படும். 0.4 ஹெக்டர் பரப்பளவைக் கொண்ட அது 'கிங்ஸ் டாக்' பகுதியில் இருக்கும்.
அதற்குப் பிறகு 2025ஆம் ஆண்டுக்குள் அலெக்சாண்டிரா இயற்கைப் பூங்கா அமைக்கப்படும். வனப் பகுதியில் அமைந்துள்ள 500 மீட்டர் பாதை அந்தப் பூங்காவின் ஓர் அங்கம்.
இந்த வட்டாரத்தில் 'கெப்பல் கிளப்' நிலையம் அமைந்துள்ள பகுதியில் வீடமைப்புத் திட்டங்கள் கட்டப்படவுள்ளன. அங்கு சுமார் 6,000 வீவக வீடுகள் கட்டப்படும் என்று அமைச்சர் லீ கூறினார்.
அந்த வீடமைப்புத் திட்டங்களுடன் சேர்த்து இதர இரண்டு பூங்காக்களும் அமைக்கப்படும்.
லேப்ரடார், அலெக்சாண்டிரா பகுதிகளில் நான்கு புதிய பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன

