வாடகைக்கு விடப்படும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக, கொண்டோமினி யம் வீடுகளின் எண்ணிக்கை பல மாதச் சரிவுக்குப் பிறகு கடந்த மாதம் அதிகரித்தது. அத்துடன் அவற்றுக்கான வாடகையும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது.
கொவிட்-19 கிருமித்தொற்றை எதிர்கொள்ள நடைமுறைப்படுத்தப்பட்ட பாதுகாப்பு விதிமுறைகள் தளர்த்தப்பட்டதால் வீடுகளை வாடகைக்கு எடுக்க விரும்புவோர் தங்களுக்கு ஏற்புடைய வீடுகளைத் தேட ஒவ்வொரு வீடாகச் சென்று பார்க்க முடிவதால் வாடகைக்கு விடப்படும் வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து, வெளிநாட்டு ஊழியர்களின் வருகையாலும் கூடுதல் வீடுகள் வாடகைக்கு விடப்படுகின்றன.
கடந்த மாதம் வாடகைக்கு விடப்பட்ட கொண்டோமினியம் வீடு
களின் விகிதம் 21.2 விழுக்காடு உயர்ந்தது. ஏறத்தாழ 4,683 கொண்டோமினியம் வீடுகள் வாடகைக்கு விடப்பட்டன. ஒப்புநோக்க, பிப்ரவரி மாதத்தில் 3,863 கொண்டோமினியம் வீடுகள் வாடகைக்கு விடப்பட்டன. இத்தகவல்களை சொத்து இணையவாசல்களான 99.co, எஸ்ஆர்எக்ஸ் ஆகியவை நேற்று வெளியிட்டன.
கடந்த மாதம் கூடுதல் வீவக வீடுகளும் வாடகைக்கு விடப்பட்டன. வாடகைக்கு விடப்படும் வீவக வீடுகளின் விகிதம் 31.3 விழுக்காடு ஏற்றம் கண்டது. கிட்டத்தட்ட 1,767 வீவக வீடுகள் கடந்த மாதம் வாடகைக்கு விடப்பட்டன. பிப்ரவரி மாதம் வாடகைக்கு விடப்பட்ட 1,346 வீடுகளைவிட இது அதிகம்.
கொண்டோமினியம் வீடுகளுக்கான வாடகை சென்ற மாதம் 2.9 விழுக்காடு அதிகரித்தது. வீவக வீடுகளுக்கான வாடகை 1.4 விழுக்காடு உயர்ந்தது. கொண்டோமினியம் வீடுகளுக்கான வாடகை தொடர்ந்து 15 மாதங்களாக ஏற்றம் கண்டு வருகிறது. வீவக வீடு
களுக்கான வாடகை தொடர்ந்து 21 மாதங்களாக அதிகரித்துள்ளது.
"எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு, அண்மை வாரங்களாக மலேசிய ஊழியர்கள் பலர் தங்குவதற்காக வாடகை வீடுகள் பற்றி விசாரிக்க எங்களை அழைத்துள்ளனர்," என்று
ஆரஞ்ச்டீ அண்ட் டை சொத்து முகவையின் ஆய்வு மற்றும் பகுப்பாய்வுப் பிரிவின் மூத்த துணைத் தலைவர் திருவாட்டி கிறிஸ்டின் சுன் கூறினார்.
ஹாங்காங்கில் மிகக் கடுமையான கொவிட்-19 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் அவற்றிடமிருந்து தப்பிக்க ஹாங்காங் நாட்டவர்கள் பலர் சிங்கப்பூரில் குறைந்த காலத்துக்கு வாடகை வீடுகளில் தங்குவதற்கு ஏற்பாடு செய்கிறார்கள் என்று ஹட்டன்ஸ் ஏஷியாவின் தலைமை நிர்வாகி மார்க் யிப் தெரிவித்தார்.

