கவண்வில் பயிற்சியின்போது குறிதவறி அடுக்குமாடி வீடுகளின் கண்ணாடி சன்னல்களை உடைத்த 61 வயது முதியவருக்கு நேற்று, மூன்று வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
2019 டிசம்பர் மாதத்தில் ஹவ்காங் அவென்யூ 9ல் உள்ள புளோக் 933ன் அடுக்குமாடி கார் நிறுத்துமிடத்தில் கவண்வில் பயிற்சியில் ஈடுபட்டபோது அருகில் இருந்த வீடுகளின் கண்ணாடி சன்னல்களை உடைத்ததை சான் ஃபான் கியோ இம்மாதம் ஐந்தாம் தேதி ஒப்புக்கொண்டார்.
பொழுதுபோக்கிற்காக உலோகக் குண்டுகளை கவண்வில்மூலம் குறிபார்த்து பிளாஸ்டிக் போத்தல்கள்மீது அடிக்கும் பயிற்சியில் அவர் ஈடுபட்டார்.
2019 நவம்பர் மாதத்துக்கும் 2020ஆம் ஆண்டு ஜனவரிக்கும் இடையே, தாவ்பாவ் மின்-வர்த்தகத் தளத்தின் மூலம் ஏழு கவண்வில்களையும், அவற்றில் பயன்படுத்துவதற்கான உலோகக் குண்டுகளையும் வாங்கியதாகக் கூறினார் சான்.
தனிப்பட்ட வேலைகளை முடிப்பதற்கு அவகாசம் தரும் பொருட்டு, இந்த மாதம் 27ஆம் தேதியில் இருந்து தண்டனையை நிறைவேற்ற சானுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.