உடற்கட்டு பயிற்றுவிப்பாளர் யுவராஜ் துரியாதாசு, 36, தமிழ் புத்தாண்டைக் கொண்டாட இன்று குடும்பத்துடன் இந்து ஆலயம் சென்றிருந்தார். அதோடு அவரது கொண்டாட்டங்கள் நின்றுவிடவில்லை.
சிங்களப் பெண்ணைத் திருமணம் செய்த அவர் தனது மனைவியுடனும் தங்களது மூன்று மாதப் பெண் குழந்தை ரக்ஷையாவுடனும் இந்து ஆலய தரிசனத்திற்குப் பிறகு பெளத்த ஆலயத்துக்கும் சென்றார்.
செயிண்ட் மைக்கல்ஸ் ரோட்டில் உள்ள ஸ்ரீலங்கராமயா பௌத்த ஆலயம் சிங்களர்களர்களிடையே பிரசித்தி பெற்ற ஆலயம்.
தற்போதைய நிலவரம் சவால் மிக்கதாக இருந்தாலும் நம்பிக்கையுடன் தமது புதிய குடும்பத்தைத் தொடங்கியுள்ளதாக யுவராஜ் கூறினார். இவரைப் போன்றே பலரும் இன்று புத்தாண்டை வழிபாட்டுடன் கொண்டாடினர்.
இலங்கையில் சிங்களர்களும் தமிழர்களும் ஒரு மக்களாக புத்தாண்டு கொண்டாடுவது வழக்கம் என்றும் பௌத்த ஆலயங்கள் அன்று பொங்கலைப் போன்ற ஓர் இனிப்புச் சாதத்தை பக்தர்கள்களுக்குப் பரிமாறும் என்றும் ஆலயத்தின் தலைமை பிக்கு தவத்திரு கே. ரத்தினானந்த தேரோ தெரிவித்தார். சிங்களர்கள் மட்டுமின்றி தமிழர்களும் இன்று இங்கு ஆலய தரிசனம் செய்தனர்.


