முதியவர் ஒருவர் ஏற்றுக்கொள்ள இயலாத வகையில் நடந்து கொண்டு இருக்கிறார் என்று அவருடைய பணிப்பெண் குறைகூறி இருந்தார். அதனால் மனம் சஞ்சலப்பட்ட அந்த முதியவர் பின்னிரவு நேரத்தில் கொஞ்சம் தூரம் நடந்து வரலாம் என்று வெளியே சென்றார்.
பிறகு அவர், புக்கிட் தீமா பகுதியில் இருக்கும் கூட்டுரிமை அடுக்குமாடி புளோக் ஒன்றின் நீச்சல் குளத்தில் மிதந்த நிலையில் காணப்பட்டார். பென்சன் டே, 73, என்ற வேலை ஓய்வுபெற்ற அந்த முதியவரின் உடல் நீச்சல் குளத்தில் இருந்து மீட்கப்பட்டது. அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இச்சம்பவம் சென்ற ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி அதிகாலை 3.12 மணிக்கு நிகழ்ந்தது. முதியவர் மரணம் தொடர்பான விசாரணை நேற்று நடந்தது. துரதிருஷ்டவசமான சம்பவம் என மரண விசாரணை அதிகாரி கிறிஸ்டோஃபர் கோ தீர்ப்பளித்தார்.
நீச்சல் குளப் பகுதி இருட்டாக இருந்தது. மழை பெய்து கொண்டு இருந்தது. தரை வழுக்கும் நிலையில் இருந்தது. அந்த நேரத்தில் மனமுடைந்த நிலையில் நடந்து போன முதியவர், கவனமின்றித் தரையைக் கவனிக்காமல் காலடி எடுத்து வைத்திருக்கலாம்.
அதனால் கால் வழுக்கி முதியவர் தரையில் விழுந்ததால் தலையில் அடிபட்ட நிலையில், அவர் நீச்சல் குளத்தில் விழுந்திருக்க வாய்ப்புண்டு என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார்.
என்ன நிகழ்ந்தது என்பது யாருக்கும் தெரியாது. அந்தச் சம்பவம் பிரத்தியேக படச்சாதனத்திலும் பதிவாகவில்லை என்பதை நீதிபதி சுட்டிக்காட்டினார்.
முதியவர் கவலை அடைந்து இருந்தார். ஆனால் உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம் அவருக்கு இருந்ததாகவும் தெரியவில்லை. பணிப்பெண் முதியவரின் நடத்தை தொடர்பில் தெரிவித்த புகார் பற்றிய விவரங்கள் எதுவும் நீதிமன்ற ஆவணத்தில் இல்லை.
முதியவரின் உடல் நீச்சல் குளத்தில் இருந்து மீட்கப்பட்ட பிறகு தடயவியல் பரிசோதனை நடத்தப்பட்டது. அவர் மூழ்கி இறந்துவிட்டதாகத் தெரியவந்தது.
மரணத்தில் சூது இருப்பதாகச் சந்தேகிக்கப்படவில்லை.

