துவாஸ் சோதனைச்சாவடியில் இந்த மாதத் தொடக்கத்தில் $300,000க்கும் அதிக மதிப்புள்ள மின்னாவியாக்கிச் சாதனங்களும் இதர உபகரணங்களும் அதிகாரிகளிடம் சிக்கின.
அவை மலேசியாவில் பதியப்பட்ட லாரிகளில் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. தனித்தனியான மூன்று கடத்தல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு அவை கைப்பற்றப்பட்டதாக குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையமும் அறிவியல் சுகாதார ஆணையமும் கூட்டு அறிக்கையில் தெரிவித்தன.
குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணைய அதிகாரிகள், ஏப்ரல் 5ஆம் தேதியும் 7ஆம் தேதியும் லாரிகளில் 1,200 மின்னாவியாக்கி களையும் 49,000க்கும் மேற்பட்ட மின்னாவியாக்கி திரவக் குப்பிகளையும் இடைமறித்தனர்.
இந்த விவகாரம் புலன்விசாரணைக்காக அறிவியல் சுகாதார ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. 21 வயது முதல் 51 வயது வரைப்பட்ட ஐந்து மலேசியர்கள் விசாரணையில் உதவுகிறார்கள்.
மின்னாவியாக்கி என்பது ஒரு கருவி. அதில் ஆவியை வெளியிடும் கருவி, பேட்டரி, ஒரு வகை 'மின் திரவத்தை' அல்லது சாற்றை நிரப்புவதற்கான சிறிய குப்பி ஆகியவை இருக்கும்.
சிங்கப்பூரில் மின் சிகரெட்டு உட்பட மின்னாவியாக்கிக் கருவிக்கு 2018 பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய கருவிகளை இறக்குமதி செய்வது 2016 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சட்டவிரோதமானது.
ஷிஷா புகையிலை, புகைவராத புகையிலை, மெல்லக்கூடிய புகையிலை, மின்னாவியாக்கிக் கருவி, உதிரிபாகங்கள் ஆகிய போலி புகையிலைப் பொருள்களை இறக்குமதி செய்வது, விநியோகிப்பது, விற்பது ஆகியவை புகையிலை (விளம்பர, விற்பனை கட்டுப்பாடு) சட்டத்தின்கீழ் சட்ட விரோதமான செயல்களாகும்.
இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு $10,000 வரை அபராதம், ஆறுமாதம் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்க முடியும். திரும்பவும் இதே குற்றத்தைச் செய்தால் தண்டனை கடுமையாகும்.
மின்னாவியாக்கிக் கருவிகள் தொடர்பான சட்டவிரோதமாக இறக்குமதி விநியோகம் விற்பனை பற்றி யாருக்காவது தகவல் தெரிந்தால் அவர்கள் www.go.gov.sg/report tobaccooffences என்ற முகவரியில் தெரிவிக்கலாம்.
அல்லது 6684-2036 அல்லது 6684-2037 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.

