சிங்கப்பூர் நாணய ஆணையம் நேற்று முன்தினம் நாணயக் கொள்கையை இறுக்கியதைத் தொடர்ந்து சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு இரண்டு வாரங்களில் இல்லாத அளவு அதிகமாகப் பதிவானது. வரும் வாரங்களிலும் சிங்கப்பூர் வெள்ளி வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இந்த ஆண்டு முற்பாதிக்குப் பிறகு வெள்ளியின் நிலை குறித்து தற்போது தெளிவு இல்லை. பிற்காலத்தில் பணவீக்கம் எந்த நிலையில் இருக்கும் என்பது தற்போது தெரியாதது, சிங்கப்பூரின் முக்கிய வர்த்தகப் பங்காளி நாடான சீனாவின் ரென்மின்பி நாணயம் வலுவிழந்து இருக்கக்கூடிய சாத்தியம் போன்றவை, நீண்டகாலத்தில் வெள்ளியின் நிலை குறித்த தெளிவு தற்போது இல்லாததற்குக் காரணங்களாகச் சொல்லப்படுகிறது.
12 ஆண்டுகளில் முதன்முறையாக சிங்கப்பூர் நாணய ஆணையம் மிகவும் கடுமையான முறைகளைக் கொண்டு நாணயக் கொள்கையை இறுக்கியது.
பணவீக்கத்துக்கான முன்னுரைப்பையும் சிங்கப்பூர் நாணய ஆணையம் உயர்த்தியுள்ளது. இவ்வாண்டுக்கான மூலாதாரப் பணவீக்கம் 2.5லிருந்து 3.5 விழுக்காட்டுக்குள் பதிவாகும் என்று ஆணையம் கணித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் இந்த விகிதம் இரண்டிலிருந்து மூன்று விழுக்காட்டுக்குள் இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டது.
ஒட்டுமொத்த பணவீக்கம் 4.5லிருந்து 5.5 விழுக்காட்டுக்குள் பதிவாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த விகிதம் 2.5லிருந்து 3.5 விழுக்காட்டுக்குள் இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டது.
எனினும், இவ்வாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் முன்னதாகக் கணித்திருந்ததைப் போல் மூன்றிலிருந்து ஐந்து விழுக்காட்டுக்குள் பதிவாகும் என்று நாணய ஆணையம் எதிர்பார்க்கிறது.
நாணயக் கொள்கை இறுக்கப்பட்ட பிறகு அமெரிக்க டாலருக்கு எதிராக சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு 1.13510க்குக் கூடியது. கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதிக்குப் பிறகு வெள்ளியின் மதிப்பு இவ்வளவு வலுவாக இருந்தது இதுவே முதல்முறை.
அதற்குப் பிறகு இறுதியில் வெள்ளியின் மதிப்பு மேலும் உயர்ந்து 1.3569ஆகப் பதிவானது.