நியூகாசல் கிருமிப் பரவலுக்குப் பிறகு உள்ளூர்ப் பண்ணைகளின் முட்டை விநியோகம் பெரும்பாலும் மீட்சியடைந்தபோதும் சிங்கப்பூரில் இம்மாதமும் தொடர்ந்து முட்டை விலை அதிகரித்துள்ளது.
சிங்கப்பூர்க் கடைக்காரர்கள் வெளிநாடுகளில் இருந்து தருவிக்கப்படும் முட்டைகளை அதிகம் வாங்கி விநியோகிக்கின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களாக தேவையை ஈடுகட்டும் விதமாக விநியோகம் இடம்பெறுவதாக அவர்கள் கூறினர்.
இருப்பினும் கோழிகளுக்கான தீவனத்தின் விலை ஏற்றம், எரிசக்தி, போக்குவரத்து உள்ளிட்ட செலவுகள் அதிகரிப்பு போன்றவற்றால் முட்டை விலை தொடர்ந்து அதிகரிப்பதாகக் கூறப்பட்டது.
ஷெங் சியோங், ஃபேர்பிரைஸ் ஆகிய பேரங்காடிகளில் 30 முட்டைகள் கொண்ட பொட்டலத்தின் விலை $7.50. சென்ற மாதம் $7.20 ஆக இருந்த இந்தப் பொட்டலத்தின் விலை பிப்ரவரியில் $6.15 ஆக இருந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
சிங்கப்பூரின் செங் சூன் பண்ணையில் பிப்ரவரி மாதம் நியூகாசல் நோய்ப்பரவல் கண்டறியப்பட்டபோது உற்பத்தி 40 விழுக்காடு சரிந்தது; இதனால் உள்ளூர் முட்டை விநியோகம் வெகுவாகக் குறைந்தது.
சிங்கப்பூரில் பயன்படுத்தப்படும் பத்து விழுக்காட்டு முட்டைகள் இந்தப் பண்ணையில் உற்பத்தியாகின்றன.
தற்போது பண்ணையில் முட்டை உற்பத்தி பழைய நிலைக்கு மீண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
கோழிகளுக்கு நியூகாசல் நோய்க்கு எதிரான தடுப்பூசிசெலுத்தப்பட்டதாக செங் சூன் பண்ணை தெரிவித்தது. பண்ணை வளாகம் அவ்வப்போது கிருமிநீக்கம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர், மலேசியா ஆகியவற்றில் உற்பத்தியாகும் முட்டைகளின் விலை உயர்ந்தாலும்், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து தருவிக்கப்படும் முட்டைகளின் விலை நிலையாக இருப்பதாக ஃபேர்பிரைஸ் பேரங்காடி தெரிவித்தது.