கோல்டன் மைல் வளாகத்துக்கு அருகே நேற்று முன்தினம் நடந்த சண்டையின் தொடர்பில் காவல்துறை நான்கு ஆடவர்களைக் கைதுசெய்துள்ளது.
இன்ஸ்டகிராமில் பதிவேற்றப்பட்ட காணொளியில், பீச் ரோட்டில் ஆடவர் கும்பல் ஒன்று கைகலப்பில் ஈடுபட்டதைக் காணமுடிகிறது.
புதன்கிழமை பின்னிரவு 2.40 மணியளவில் இதுகுறித்துத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது. இதன் தொடர்பில், 22 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட நான்கு ஆடவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
சம்பவ இடத்தில் மருத்துவ உதவியாளர் ஆடவர் ஒருவரின் உடல்நிலையைச் சோதித்ததாகவும் அந்த ஆடவர் மருத்துவமனைக்குச் செல்வதை விரும்பவில்லை என்றும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
அமைதிக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பொது இடத்தில் சண்டையிட்டதாக வகைப்படுத்தப்பட்ட இந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறை விசாரணை தொடர்கிறது.
கோல்டன் மைல் வளாக வட்டாரத்தில் அடிக்கடி இத்தகைய சண்டை நடப்பதாக அங்குள்ள வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

