பிரதமர் லீ சியன் லூங்கிற்கு கடந்த பிப்ரவரி மாதம் 70 வயதானது. அந்த வயதை எட்டும்போது பிரதமர் பதவியை அடுத்தவரிடம் ஒப்படைத்துவிட்டு அந்தப் பதவியிலிருந்து தான் விலகிவிடப் போவதாக ஏற்கெனவே திரு லீ கூறி இருந்தார்.
பிறகு கொவிட்-19 தொற்று தலைதூக்கியதால் சிங்கப்பூர் வெற்றிகரமான முறையில் அதைச் சமாளிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் தனது பதவி ஓய்வு திட்டத்தைத் தாமதப்படுத்தப் போவதாக திரு லீ தெரிவித்து இருந்தார்.
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நான்காம் தலைமுறைத் தலைவர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து அந்த அணி புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை தொடர்ந்து பதவியில் இருந்து வரப்போவதாக திரு லீ பிறகு குறிப்பிட்டார்.
இந்நிலையில், பிரதமர் பொறுப்பை ஏற்க லாரன்ஸ் வோங் தயாரானதும் அதை அவரிடம் ஒப்படைக்க தான் ஆயத்தமாக இருப்பதாக நேற்று திரு லீ தெரிவித்தார்.
இதில் 2025ல் ஆம் ஆண்டுவாக்கில் நடக்கவிருக்கும் அடுத்த பொதுத் தேர்தல் பரிசீலிக்கப்பட வேண்டிய ஓர் அம்சம் என்பதை திரு லீ சுட்டினார்.
தேர்தலுக்கு முன்பே பிரதமர் பொறுப்பை அவரிடம் ஒப்படைப்பதா அல்லது தன் தலைமையில் தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெற்ற பிறகு அந்தப் பொறுப்பை லாரன்ஸ் வோங்கிடம் ஒப்படைப்பதா என்பது பற்றி அவருடன் தான் விவாதிக்கப் போவதாக திரு லீ குறிப்பிட்டார்.
இதன் தொடர்பில் அதே செய்தியாளர் கூட்டத்தில் கருத்து கூறிய திரு வோங், "பிரதமர் பொறுப்பை ஏற்க நான் தயாராக இருக்கும்போது அது பற்றி பிரதமரிடம் நிச்சயம் எடுத்துச் சொல்வேன்," என்று தெரிவித்தார்.