சிறு வயதிலிருந்தே விலங்குகளைப் பற்றிய ஆவணப்படங்களை 24 வயது ரம்யா ரமேஷ் ரசித்துப் பார்ப்பார். தேசிய பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் பட்டப்படிப்பை முடித்த அவருக்கு, சுற்றுச்சூழலைக் காப்பதில் அதிக ஈடுபாடு இருந்ததால் அது தொடர்பான பணியை மேற்கொள்ள விரும்பினார்.
தமது பல்கலைக்கழக நாள்களில் வேலை அனுபவப் பயிற்சியை (Internship) 'பவர்ட் பை பிளாண்ட்' என்ற சிறிய நிறுவனத்தில் மேற்கொண்டார். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நீடித்த நிலைத்தன்மையுடைய வழிமுறைகளைப் பயன்படுத்தி அங்கு மேற்கொள்ளப்பட்ட பணிகளை அவர் அங்குஅறிந்துகொண்டார். தானும் சமுதாயத்திற்கு அதேபோல் பங்களிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.
அவ்வாறே 'பவர்ட் பை பிளாண்ட்' நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆனார்.
சருமத்தைப் பராமரிக்கும் பொருள்களை விற்கும் அவரது வர்த்தகம், விலங்குகளால் பெறப்பட்ட பொருள்களையும் விலங்குகளின்மீது சோதனை செய்யப்பட்ட பொருள்களையும் முற்றிலும் தவிர்க்கிறது.
அமெரிக்கா, தென்கொரியா போன்ற நாடுகளிலிருந்து தோலைப் பராமரிக்கும் நனிசைவப் பொருள்களை இறக்குமதி செய்கிறது, 'பவர்ட் பை பிளாண்ட்'.
தான் விற்கும் பொருள்களில் காப்பி எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்பட்ட 'சீரம்', பலராலும் நாடப்படுவதாக அவர் குறிப்பிட்டார். நனிசைவப் பொருள்களை மட்டுமே மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்காக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார் இளையர் ரம்யா.
தோலைப் பராமரிக்கும் நனிசைவ அழகுப் பராமரிப்புப் பொருள்களை விற்பதுடன் இன்று முழு நனிசைவ வாழ்க்கைமுறையையும் அவர் தழுவியுள்ளார்.
அவர் 2020ஆம் ஆண்டில் இரைப்பை அழற்சி நோய் வந்த பிறகு நனிசைவ உணவை மட்டுமே உண்ணப் பழகிக்கொண்டார்.
இந்த வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்க முதலில் சவாலாக இருந்தபோதும் இன்று நனிசைவ உணவை எப்படிச் சுவையாகச் சமைக்கலாம் என்று தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் காணொளி வாயிலாக மற்றப் பயனாளர்களிடம் இவர் பகிர்ந்துவருகிறார்.

