வெளிநாடுகளில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களில் சிங்கப்பூருக்குள் நுழைய விரும்பும் வாகனமோட்டிகள் 'விஇபி' எனும் வாகன நுழைவு அனுமதியைப் பெறக் காத்திருக்கும் காலம் விரைவில் குறையவிருக்கிறது.
தற்போது இதற்கு ஏழு வாரம் காத்திருக்க வேண்டியுள்ளது. படிப்படியாக இதனை மூன்று வாரங்களுக்குக் குறைக்க நிலப் போக்குவரத்து ஆணையம் நடவடிக்கை எடுத்துவருகிறது.
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான நில எல்லைகள் இம்மாதம் 1ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து, வாகன நுழைவு அனுமதி கோரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
ஏழு வாரம் காத்திருக்கவேண்டும் என்று கூறப்பட்டாலும் அதற்கு முன்பாகவே விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்படுகின்றன.
மார்ச் 31ஆம் தேதி முதல் இதுவரை ஏறத்தாழ 50,000 விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பம் தொடர்பான முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆணையம் கூறியது. மொத்த விண்ணப்பங்களில் இது கிட்டத்தட்ட 40%. எஞ்சிய விண்ணப்பதாரர்களுக்கு இன்னும் மூன்று வாரங்களில் முடிவுகள் தெரிவிக்கப்படும்.
பொழுதுபோக்குக்காக சிங்கப்பூர் வருவோர் பயணத் திட்டங்களைத் தள்ளிப் போடும்படி ஆணையம் ஆலோசனை கூறியுள்ளது. அத்தியாவசியத் தேவைக்காக விண்ணப்பிப்போர் இதனால் பலனடைவர் என்பதை அது சுட்டியது.

