2020ஆம் ஆண்டுக்கான வழக்கறிஞர் பயிற்சித் தேர்வுகளில் ஆறு பேர் ஏமாற்றியது கண்டறியப்பட்டதை அடுத்து வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட அவர்கள் செய்திருந்த விண்ணப்பங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தொழில் நெறிமுறைகள், தொழில்முறை பொறுப்பு ஆகிய பாடங்களுக்கான தேர்வும் அதில் அடங்கும்.
இரண்டாவது வாய்ப்பு தரும் நோக்கில் பயிற்சி வழக்கறிஞர்களான அந்த ஆறு பேரின் பெயர்களை வெளியிட வேண்டாம் என்று உயர் நீதிமன்ற நீதிபதி சூ ஹான் டெக் ஆலோசனை கூறினார். நீண்டகால அடிப்படையில் அவர்கள் மீது தவறான எண்ணம் பதியாமல் இருக்க இது உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
"வழக்கறிஞர் தொழிலில் ஒவ்வொருவரும் சீசரின் மனைவியைப் போல சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்களாய் இருக்க வேண்டியது அவசியம். இப்படிப்பட்ட பணியில் நேர்மை தவறுதல் என்பது மிகப் பெரிய பிரச்சினை," என்றார் அவர். அதேவேளையில் ஒருவரின் தொழில்முறைப் பணி தொடங்கும் முன்பே முற்றுப்புள்ளி இடுவதும் கடுமையானது என்றார் நீதிபதி சூ.
புகழ்பெற்ற பெரிய சட்ட நிறுவனங்களில் பயிற்சி பெற்ற அந்த ஆறு பேரில் ஐவர் தேர்வு வினாக்களுக்கான பதில்களை வாட்ஸ்அப்பில் பகிர்ந்துகொண்டது கண்டறியப்பட்டதால் மீண்டும் தேர்வு எழுத அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கறிஞராகப் பயிற்சி செய்ய அவர்கள் அனுப்பிய விண்ணப்பங்கள் ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மூன்று தேர்வுகளில் ஏமாற்றிய மற்றொருவருக்கு முழுப் பாடத்தையும் மீண்டும் படிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவரது விண்ணப்பமும் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஆறு பேருமே தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அவர்களது விண்ணப்பங்கள் இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தலைமைச் சட்ட அதிகாரி, சிங்கப்பூர் சட்டக் கல்வி நிலையம், வழக்கறிஞர்கள் சங்கம் என முத்தரப்பின் ஒப்புதலைப் பெற்ற பிறகே விண்ணப்பதாரர்கள் சிங்கப்பூரில் வழக்கறிஞராகப் பணியாற்ற அனுமதிக்கப்படுவர்.
இம்மாதம் 13ஆம் தேதி ஏமாற்றிய இந்த அறுவர் உள்ளிட்ட 26 விண்ணப்பதாரர்களுக்கான நேர்காணல் இடம்பெற்றது. தேர்வில் ஏமாற்றிய ஆறு பயிற்சி வழக்கறிஞர்களின் விண்ணப்பங்களை தலைமைச் சட்ட அதிகாரி நிராகரித்தார்.
முழுப் பாடத்தையும் மீண்டும் படிக்க உத்தரவிடப்பட்ட விண்ணப்பதாரர் ஒருவர், தாம் தவறு ஏதும் செய்யவில்லை என்று கூறினார். தாமும் மற்றொருவரும் சேர்ந்து படித்ததால் இருவரின் பதில்களும் ஒரே மாதிரி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மற்ற ஐவரும் சட்டக் கல்வி நிலையத்தின் விசாரணையில் தொடக்கத்திலேயே தங்கள் தவற்றை ஒப்புக்கொண்டனர்.

