நியூசிலாந்துப் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் (படம்), மூன்று நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு நேற்று சிங்கப்பூர் வந்துள்ளார்.
கொவிட்-19 கிருமிப் பரவலுக்குப் பின்னர் அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இது.
நியூசிலாந்தின் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது முறையாக சிங்கப்பூருக்கு வந்துள்ள திருவாட்டி ஆர்டனுக்கு, இஸ்தானாவில் இன்று அதிகாரபூர்வ வரவேற்பு அளிக்கப்படும் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
அதிபர் ஹலிமா யாக்கோப், பிரதமர் லீ சியன் லூங் ஆகியோரை அவர் சந்தித்துப் பேசுவார். பிரதமர் லீ அவருக்கு இன்று மதிய விருந்தளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
திருவாட்டி ஆர்டனை கௌரவிக்கும் விதமாக புதிய வகை ஆர்க்கிட் மலருக்கு அவரது பெயர் சூட்டப்படும்.
பிரதமர் ஆர்டனின் வருகை சிங்கப்பூருக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான உன்னதமான உறவை மறுஉறுதிப்படுத்துவதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.
நியூசிலாந்துப் பிரதமருடன் அவரது கணவர் கிளார்க் கேஃபோர்ட், அந்நாட்டின் வர்த்தக, ஏற்றுமதி வளர்ச்சி அமைச்சர் டேமியன் ஓ'கொன்னர் மற்றும் மூத்த அதிகாரிகளும் வந்துள்ளனர்.
நாளை திருவாட்டி ஆர்டன் சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு ஜப்பான் செல்வார் என்று நியூசிலாந்து அரசாங்கம் தெரிவித்தது.
முன்னதாக, இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் உள்ள பொருளியல், பாதுகாப்புப் பங்காளித்துவ நாடுகளான சிங்கப்பூர், ஜப்பான் ஆகியவற்றுடன் மீண்டும் தொடர்பை ஏற்றுக்கொள்வது தமது பயணத்தின் இலக்கு என்று திருவாட்டி ஆர்டன் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு முன்னர் 2019ஆம் ஆண்டு அவர் இங்கு வந்திருந்தபோது உருவாக்கப்பட்ட சிங்கப்பூர்-நியூசிலாந்து மேம்பட்ட பங்காளித்துவத்தின் அடிப்படையில் இந்த பயணம் அமைந்திருப்பதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு கூறியது.
வர்த்தகம், பொருளியல், தற்காப்பு, பாதுகாப்பு, அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம் ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுவதும் இருநாட்டு மக்களிடையே தொடர்புகளை மேம்படுத்துவதும் இந்த மேம்பட்ட பங்காளித்துவத்தின் நோக்கம்.
இருநாட்டு கல்வி அமைச்சுகளும் தத்தம் கல்விமுறை தொடர்பான தகவல்களைப் பரிமாறிக்கொள்ள இது வகைசெய்கிறது.
2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதியில் இருந்து சிங்கப்பூருக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் பயணம் செய்யும் இரு நாட்டுக் குடிமக்களும் தானியக்க முறையில் குடிநுழைவுச் சோதனைகளை முடித்துக்கொள்ளவும் இந்த மேம்பட்ட பங்காளித்துவம் வகைசெய்கிறது.

