பீச் ரோட்டில் கடந்த வியாழக்
கிழமை ஆடவர் ஒருவர் தமது மனைவியை வெட்டுக்கத்தியால் தாக்கியபோது அந்தக் கொடூரச் சம்பவத்தைத் தடுக்க உதவியதற்காக ஒன்பது ஆடவர்களை காவல்துறை பாராட்டி விருது வழங்கியுள்ளது.
அன்று மாலை ஸோங் ஹுவா ஸ்டீம்போட் உணவகம் அருகே தமது மனைவியை அந்த ஆடவர் சரமாரியாக வெட்டினார். அதனைத் தொடர்ந்து அந்தப் பெண் ரத்தம் சொட்டச் சொட்ட கீழே விழுந்தபடி உதவி கேட்டு அலறினார். ஒன்பது ஆடவர்களில் ஒருவரான திரு வெய் சென் சியாங், 32, அச்சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.
"என்னைக் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள். என் கை போய்விட்டது," என்ற அலறல் சத்தத்தைத் தாம் கேட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் நேற்று அவர் கூறினார்.
ஸோங் ஹுவா ஸ்டீம்போட் உணவகத்தின் சமையலறையில் பணியாற்றிய அவர், பெண்ணின் கூக்குரலைக் கேட்டு அவரைத் தாக்கிக்கொண்டிருந்த கணவன் மீது நாற்காலியை வீசினார். இதர எட்டுப் பேரும் கையில் கிடைத்த பொருள்களை அந்த ஆடவர் மீது வீசினர். அருகிலிருந்த உணவகங்கள் மற்றும் குத்தகை நிறுவனப் பணியாளர்கள் அவர்கள். பொருள்கள் அடுத்தடுத்து வீசப்பட்டதைத் தொடர்ந்து ஆடவர் அங்கிருந்து ஓடிவிட்டார்.
பின்னர் மாலை 5.30 மணியளவில் காவல்துறையினர் வரும் வரை அந்தப் பெண்ணைச் சுற்றி பாதுகாத்து அவர்கள் நின்றனர். தாக்கப்பட்ட ஹான் ஹோங்லி, 41, என்ற அந்தப் பெண் காயமுற்ற தமது கையைத் தாங்கிப் பிடித்தவாறு இருந்தார். டேசர் கருவியைப் பயன்படுத்தி ஆடவரை காவல்
துறையினர் பிடித்தனர். சம்பவம் குறித்து காவல்துறையை அழைத்த பலரில் ஒருவரான திருவாட்டி டோ லீ குவீ என்பவரையும் நேற்று காவல்துறையினர் பாராட்டினர்.
"பெண்ணின் காயத்தைக் கண் டதும் பயந்துவிட்டேன். ஆனாலும் அந்த நேரத்தில் யோசிக்க நேர மில்லை. மீண்டும் அப்பெண்ணை அவரது கணவர் நெருங்கிவிடாத வாறு நாங்கள் பார்த்துக்கொண் டோம்," என்று மாண்டரின் மொழி யில் திரு வெய் கூறினார்.
திருவாட்டி டோ உள்பட 10 பேருக்கும் பொதுநல ஊக்க உணர்வு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்வு மத்திய காவல்துறை பிரிவு அலுவலகத்தில் நேற்று நிகழ்ந்தது.
கைது செய்யப்பட்ட செங் குயோயுவான், 46, மீது கொலைமுயற்சி குற்றம் சுமத்தப்பட்டது. இவரும் இவரது மனைவியும் மருத்துவ
மனையில் சிகிச்சை பெறுவதாக அறியப்படுகிறது.