சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் நேற்று முதல் இரவு நேர கேளிக்கை நிலையங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கின. மதுபானக் கூடங்கள், 'கரவோக்கே' கூடங்கள் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.
குடும்பத்தார் ஒன்றுகூட தோதான 'கரவோக்கே' கூடங்களை இயக்கும் 'தியோ ஹெங் கேடிவி' நிறுவனத்திற்கு வர்த்தகம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. நேற்று முதல் அதன் கூடங்களுக்கு மாணவர்கள், திருமணமான தம்பதியினர் உள்ளிட்டோர் திரளாக வரத் தொடங்கினர்.
சிலர் வேலையிலிருந்து ஓய்வெடுத்துக்கொண்டும் அங்கு சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
'தியோ ஹெங்' நிறுவனத்திற்கு சன்டெக் சிட்டி நிலையத்தில் 19 'கரவோக்கே' கூடங்கள் உள்ளன. வரும் ஜூன் மாதம்வரை அவை அனைத்துக்கும் பதிவு முடிந்துவிட்டது. நீண்டகாலமாக 'கரவோக்கே' கூடங்கள் இயங்காமல் இருந்தது மக்களிடம் இப்படிப்பட்ட அமோகமான வரவேற்பு இருப்பதற்குக் காரணம்.
'ஜேகியூப்' கடைத்தொகுதியில் உள்ள 'தியோ ஹெங்'கின் எல்லா 'கரவோக்கே' கூடங்களுக்கும் மே மாதம்வரை வார இறுதி நாள்களுக்கும் விடுமுறை நாள்களுக்கும் மக்கள் பதிவுசெய்துள்ளனர். இதர பகுதிகளில் இருக்கும் அந்நிறுவனத்தின் 'கரவோக்கே' கூடங்களுக்கும் மக்கள் வேகமாகப் பதிவுசெய்து வருகின்றனர்.
அதிகரித்துள்ள வாடகை போன்ற காரணங்களால் 'கரவோக்கே' கூடங்களுக்குப் பதிவுசெய்வதற்கான விலை 50 விழுக்காட்டுக்கும் மேல் கூடியது. ஆனாலும் மக்களிடம் உள்ள ஆர்வத்துக்குக் குறைவில்லை.
ஒரு கூடத்தின் பரப்பளவைப் பொறுத்து அங்கு 10 பேர் வரை இருக்கலாம்.
'கரவோக்கே' கூடங்கள், மதுபானக் கூடங்கள் ஆகியவை சில கட்டுப்பாடுகளுடன் இயங்க இப்போது அனுமதி உண்டு. முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான மாறுபட்ட விதிமுறைகளைச் செயல்படுத்துவது கட்டுப்பாடுகளில் ஒன்று.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபோதும் முன்பைப்போல் அனைத்து நடவடிக்கைகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்போவதில்லை என்று சில மதுபானக் கூடங்கள் முன்னதாகத் தெரிவித்திருந்தன.
நடனமாடுவது அத்தகைய நடவடிக்கைகளில் ஒன்று.

