ஹாங்காங்கில் துப்பாக்கியைக் கொண்டு வங்கியில் திருடியதாக 73 வயது சிங்கப்பூர் ஆடவர் சந்தேகிக்கப்படுகிறார். அவர் சுமார் 2,400 வெள்ளிப் பணத்தைத் திருடியதாகச் சொல்லப்படுகிறது.
திருடிய பிறகு அந்த ஆடவர் பொதுப் பேருந்தில் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. சுமார் ஏழு மணிநேரத்திற்குப் பிறகு அவர் பிடிபட்டார்.
திருடியதாகவும் அனுமதி வழங்கப்பட்ட காலத்தைத் தாண்டி ஹாங்காங்கில் இருந்ததாகவும் சந்தேக நபர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக ஹாங்காங் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இம்மாதம் 14ஆம் தேதியன்று பிற்பகல் 3.40 மணியளவில் காவ்லூன் பகுதியில் நேத்தன் ரோட்டில் இருக்கும் வங்கி ஒன்றில் திருட்டு நிகழ்ந்ததாகத் தங்களுக்குத் தகவல் வந்ததென காவல்துறையினர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தனர். துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணத்தை எடுத்துக்கொண்டு சந்தேக நபர் தப்பியோடியதாக வங்கி ஊழியர்கள் கூறினர். சுமார் 1.7 மீட்டர் உயரம் இருக்கும் சந்தேக நபர் வலுவான உடல்வாகைக் கொண்டவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்று ஹாங்காங் காவல்துறை தெரிவித்தது.

