புனித வெள்ளிக்கிழமை வார இறுதியில் சிங்கப்பூர்-மலேசிய தரைவழி எல்லைகளில் சுமார் 436,000 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை, அதற்கு முந்தைய வார இறுதியில் பதிவானதைவிட கிட்டத்தட்ட 25 விழுக்காடு அதிகம்.
சென்ற வாரம் புனித வெள்ளிக்கிழமைக்கு முதல் நாளான வியாழக்கிழமையன்று உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்கு வெளியே பலர் நீண்ட வரிசையில் நிற்கத் தொடங்கினர். அன்று மட்டுமே குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் 112,700 பயணிகளின் விண்ணப்பங்களைக் கையாண்டது.
இம்மாதம் முதல் தேதியிலிருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு சிங்கப்பூர்-மலேசிய எல்லைகள் முழுமையாகத் திறக்கப்பட்டன. அதற்குப் பிறகு புனித வெள்ளிக்கிழமை வார இறுதியில்தான் ஆக அதிகமானோர் தரைவழி எல்லைகளில் பயணம் மேற்கொண்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
புனித வெள்ளிக்கிழமைக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமைக்கும் இடைப்பட்ட காலத்தில் மொத்தம் 242,500 பேர் ஜோகூர் கடற்பாலம் அல்லது துவாஸ் இரண்டாம் இணைப்பின் வழியாகப் பயணம் மேற்கொண்டனர் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்தது.