உலகெங்கும் மில்லியன் கணக்கானோர் டெங்கித் தொற்றுக்கு ஆளாகிச் சிரமப்படுகின்றனர்; சிலர் உயிரிழக்கின்றனர்.
பல்லாண்டுகளாக மக்களை நோய்க்கு ஆளாக்கிவரும் இந்தக் கிருமி 1943ல் அடையாளம் காணப்பட்டது. இருந்தபோதும் இன்னும் இதற்கான தடுப்பூசியோ டெங்கி வராமல் தடுப்பதற்குரிய குறிப்பிட்ட சிகிச்சைமுறையோ கண்டறியப்படவில்லை என்பதே உண்மை.
உலகளவில் நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டெங்கி பரவியுள்ளது என்றார் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ இணைப் பேராசிரியர் கெவின் டான்.
டெங்கிக் கருத்தரங்கில் உரையாற்றிய அவர், ஆண்டுக்கு ஏறக்குறைய நூறு மில்லியன் பேர் பாதிக்கப்படுவதாகவும் அவர்களில் 70 விழுக்காட்டினர் ஆசியாவில் உள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளோ தடுப்பு மருத்துவமுறையோ இல்லாததன் காரணத்தையும் வல்லுநர்கள் விளக்கினர். டெங்கிக் கிருமி நான்கு வகைப்படுவதால் ஒரே தடுப்பு மருந்து அனைத்தையும் தடுக்க இயலாது.
மேலும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரான குழந்தைகள், முதியோர், உடல் எதிர்ப்புச் சக்தி இல்லாதோர் ஆகியோரே டெங்கித் தொற்றுக்கு ஆளாகின்றனர்.
தடுப்பு மருந்து அவர்களுக்குப் பாதுகாப்பானதா என்பதைச் சோதிக்கவே காலம் பிடிக்கும் என்பதை அவர்கள் சுட்டினர்.
முக்கியமாக தொடக்கத்திலேயே டெங்கிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டால்தான் பலனளிக்கும் என்று வல்லுநர்கள் கூறினர்.
பெரும்பாலான நோயாளிகள் கிருமி தொற்றிய மூன்று அல்லது நான்காவது நாளில்தான் மருத்துவரை நாடுகின்றனர்.
தடுப்பு மருந்துகளை முதலில் எலி உள்ளிட்ட விலங்குகளில் சோதிப்பது வழக்கம். ஆனால் டெங்கி விலங்குகளை கடுமையாக பாதிப்பதில்லை.
இத்தகைய சில காரணங்களால் டெங்கிக்கான தடுப்பூசியைக் கண்டு பிடிப்பதில் சிக்கல் நிலவுகிறது.