சிங்கப்பூரில் இந்த மாதம் 10ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை மொத்தம் 736 டெங்கி சம்பவங்கள் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு செப்டம்பருக்குப் பிறகு பதிவான ஆக அதிக எண்ணிக்கை அது. 2020 ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரையிலான ஒரு வார காலத்தில் 937 டெங்கி சம்பவங்கள் பதிவாயின.
சென்ற ஆண்டு ஏப்ரல் 11 முதல் 17 வரையிலான காலகட்டத்தில் பதிவான டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கை 112.
சிங்கப்பூரில் டெங்கிப் பரவல் தற்போது கடுமையாக இருப்பதாகவும் இந்த ஆண்டு மிகப் பெரிய டெங்கிப் பரவல் ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.
வழக்கமாக ஜூன் மாதத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரையிலான காலத்தில்தான் டெங்கிப் பரவல் இங்கு உச்சத்தை எட்டும். இருப்பினும் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தொடர்ந்து டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதை வாரியம் சுட்டியது.
நேற்று முன்தின நிலவரப்படி, சிங்கப்பூரின் 159 இடங்கள் டெங்கி பரவும் அபாயமிக்கவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 33 இடங்களில் பத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 16ஆம் தேதி வரை மொத்தம் 4,700க்கும் மேற்பட்ட டெங்கிச் சம்பவங்கள் பதிவாயின. அடுத்து வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கை மிகவும் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேசிய சுற்றுப்புற வாரியம் குறிப்பிட்டது.
டெங்கிப் பரவல் கடுமையானதற்கு மூன்று முக்கிய காரணங்களையும் அது கூறியது.
முதலாவது, தற்போது நிலவும் மிதமான வெப்பம், மழை, காற்றில் ஈரப்பதம் ஆகியவற்றால் ஏடிஸ் கொசுக்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கக்கூடும்.
இரண்டாவதாக, சிங்கப்பூரில் இதற்கு முன்னர் அதிகம் காணப்படாத 'செரோடைப் 3' வகை டெங்கிக் கிருமியும் இங்கே பரவி வருகிறது.
மூன்றாவதாக கணிசமானோர் இன்னும் வீட்டில் இருந்தே வேலை செய்கின்றனர். பகல் நேரங்களில்தான் ஏடிஸ் கொசுக்களின் நடமாட்டம் அதிகம் என்பதால் இதுவும் டெங்கிப் பரவலுக்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதனை முன்னிட்டு அதிகாரிகள் டெங்கிப் பரவலைத் தடுக்கும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். சீனப் புத்தாண்டுக்கு முன்பாக தாவரப் பராமரிப்பு குறித்த பிரசார இயக்கத்தை நடத்தியதுடன் இந்த ஆண்டின் டெங்கித் தடுப்பு பிரசார இயக்கத்தை முன்கூட்டியே தொடங்கினர். சமுதாய அளவில் விழிப்புணர்வை அதிகரிப்பதில் அமைப்புகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைவர்கள் எனப் பல தரப்பினரும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
டெங்கித் தடுப்பில், கட்டுமானம், பூச்சிக்கொல்லி நிறுவனங்கள் ஆகியவற்றுடன் தேசிய சுற்றுப்புற வாரியம் இணைந்து செயல்படுகிறது. ஏடிஸ் கொசுக்கள் அதிகம் காணப்படும் பகுதிகளில் ஊதா நிறப் பதாகைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஏடிஸ் கொசுக்களின் இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் 'புரோஜெக்ட் வோல்பாக்கியா' திட்டம் இந்த மாத இறுதிக்குள் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளின் 19 விழுக்காட்டுப் பரப்பிற்கு விரிவுபடுத்தப்படும்.
இத்தகைய தொடர்ச்சியான முயற்சிகளால் இந்த ஆண்டு மிகப் பெரிய அளவில் டெங்கிப் பரவல் ஏற்படாமல் தடுக்க இயலும் என்று கருதப்படுகிறது.

