சிங்கப்பூரில் எரிவாயு விநியோகம் செய்யும் 'சிட்டி எனர்ஜி' நிறுவனம், மலேசியாவில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 'இவி கனெக்ஷன்' நிறுவனத்துடன் இணைந்து கார்களுக்கு மின்னூட்டம் செய்யும் இடங்களை அமைக்கவிருக்கிறது.
'கோ' எனப்படும் இத்தகைய மின்னூட்ட இடங்கள் ஜோகூர் முதல் பினாங்கு வரை அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர், மலேசிய மின்-கார் உரிமையாளர்கள் பொதுவான செயலி மூலம் இந்த இடங்களில் மின்னூட்டம் செய்யலாம்.
கடன் பற்று அட்டை மூலம் கட்டணத்தைச் செலுத்தும் வசதியும் உண்டு.
சிங்கப்பூரின் செங்காங் வட்டாரத்தில் உள்ள பார்க் போட்டானியா கூட்டுரிமை வீட்டில் அமைக்கப்பட்டுள்ள மின்னூட்டும் இடம் இந்த மாதம் செயல்படத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மரின் பரேட் வட்டாரத்தைச் சேர்ந்த ஓல்லோய் கூட்டுரிமை வீட்டில் அமைக்கப்பட்டிருக்கும் மற்றொரு மின்னூட்டும் இடம் அடுத்த மாதம் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் சிங்கப்பூரின் பத்துக்கும் மேற்பட்ட கூட்டுரிமை வீடுகளில் 'கோ' மின்னூட்டும் இடங்கள் அமைக்கப்படும் என்று கூறப்பட்டது.
மலேசியாவில் தற்போது 20 இடங்களில் இத்தகைய மின்னூட்ட வசதிகள் சேவை வழங்கி வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 50 மின்னூட்டும் இடங்கள் அமைக்கப்படவிருக்கின்றன.
தனியார் குடியிருப்புகளில் மின்னூட்ட வசதி அமைப்பதில் கவனம் செலுத்தப்படும் என்றார் 'சிட்டி எனர்ஜி' நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பெர்ரி ஓங். இத்தகைய இடங்களில் கார் உரிமையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றார் அவர்.
'சிட்டி கேஸ்' என்று முன்னர் அழைக்கப்பட்ட 'சிட்டி எனர்ஜி' நிறுவனம் 161 ஆண்டு பழமையான் வாய்ந்தது.
தற்போது அது மின்னூட்டும் துறையிலும் கால் பதித்துள்ளது.

