உளவியல் மருத்துவம், தோல் மருத்துவம் ஆகிய மருத்துவப் பிரிவுகள் தொடர்பில் கேகே மகளிர், சிறார் மருத்துவமனை அதன் புதிய விரிவாக்கம் வழியாக மேலும் அதிகமான சேவைகளை வழங்கவுள்ளது. புதிய சேவைகள் காலனித்துவ கட்டடங்களில் அமைந்திருப்பது மேலும் ஒரு சிறப்பாகும்.
இரு மருத்துவப் பிரிவுகளில் தற்போது அமைந்துள்ள மருந்தகங்களின் எண்ணிக்கை முன்பைக் காட்டிலும் இரு மடங்காகும். இதனால் ஆண்டுக்கு 30% அதிகமானோருக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்க முடியும். புதிய வசதிகள் நேற்றுமுதல் இயங்கத் தொடங்கின. அவற்றில் மருந்துக்கடை ஒன்றும் அடங்கும் என்று கூறப்பட்டது.
"மேலும் அதிகமான மருந்தகங்களும் தோல் மருத்துவச் சிகிச்சைக்கான அறைகளும் இருப்பதுடன் நாள்பட்ட தோல் பிரச்சினைகள் உள்ள மாதர் மற்றும் சிறார் களுக்கு நாம் இனி முழுமையான மருத்துவ ஆலோசனையையும் வழங்க முடியும். இதனால், தங்களின் சிகிச்சைத் திட்டங்கள் குறித்து நோயாளிகளால் நன்கு அறிந்துகொள்ள முடியும்," என்று மருத்துவமனையின் தோல் மருத்துவப் பிரிவின் தலைவரும் மூத்த ஆலோசகருமான இணைப் பேராசிரியர் மார்க் கோ தெரிவித்தார்.
மரபியல் தோல் வியாதிகள், ரத்தக்குழாய்ப் பிரச்சினைகள், கடும், நாள்பட்ட அரிக்கும் தோல் அழற்சி போன்ற சிக்கலான பிரச்சினைகளைக் கையாளும் ஆற்றல், புதிய மருந்தகங்களுக்கு உண்டு என்றார் அவர்.
மருத்துவமனைக்கு உளவியல் ரீதியாக உதவி நாடி வரும் நோயாளிகளுக்கும் புதிய வசதிகள் பலனளிக்கும் என்று மருத்துவமனை எதிர்பார்க்கிறது.
"மகளிர் மற்றும் சிறாரின் மனநலத் தேவைகள் அதிக தொடர்புடையவை. ஒரே சூழலில் இவ்விரு பிரிவினருக்கும் தொடர்ந்து பராமரிப்பு வழங்க முடிவது நிச்சயம் பயனுள்ளதாக அமையும்," என்று மருத்துவமனையின் உளவியல் மருந்துப் பிரிவின் தலைவரும் மூத்த ஆலோசகருமான இணைப் பேராசிரியர் ஹெலன் சென் கூறினார்.
மன அழுத்தம், கவலை, மனநலக் கோளாறுகள் மற்றும் மனநோய்கள், ரத்த நாள அழற்சிப் பிரச்சினைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரிவின்கீழ் தங்களின் வாழ்க்கையில் வெவ்வேறு கட்டங்களில் இருக்கும் பெண்களுக்கும் சிறாருக்கும் மேலும் சிறந்த மருத்துவ, ஆதரவுத் திட்டங்களை விரிவடைந்துள்ள புதிய வசதிகள் வழி மேற்கொள்ளலாம் என்று கூறப்பட்டது. 1930களில் கட்டப்பட்ட இரு காலனித்துவ கட்டடங்களில் புதிய 'கேகேஎச்@ஹேலிஃபேக்ஸ்' அமைந்துள்ளது.

