ஓசிபிசி வங்கியில் நடைபெற்ற இணைய மோசடிச் சம்பவங்கள் தொடர்பாக 20 வயது ஆடவர் ஒருவர் தமது குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார்.
லியோங் ஜுன் ஸியான் எனப்படும் இவர் இந்த மோசடி தொடர்பாக நீதிமன்றத்தால் விசாரித்து முடிக்கப்பட்ட முதலாம் நபர்.
இவருக்கான தண்டனை அடுத்த வாரம் விதிக்கப்படும் என்று தெரிகிறது. அதுவரை அவரை சீர்திருத்தப் பயிற்சி மையத்தில் விசாரணைக் கைதியாக வைத்திருக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், சீர்திருத்தப் பயிற்சி மற்றும் நன்னடத்தைக் கண்காணிப்புக்கு இவர் தகுதியானவரா என சான்று அளிக்குமாறும் தமது உத்தரவில் அவர் குறிப்பிட்டார்.
ஓசிபிசி வங்கி அதிகாரிகள் போல செயல்பட்ட கும்பல் வாடிக்கையாளர்களைத் தொடர்புகொண்டு வங்கிக் கணக்கில் தவறு நடந்திருப்பதாகப் பொய்யாகக் கூறுவர். பின்னர் இணைப்பு ஒன்றை அனுப்புவர் அந்த இணைப்பைச் சொடுக்கினால் மறைச்சொல் போன்ற ரகசியத் தகவல்களைப் பெற்று பணத்தை மோசடி செய்து விடுவர்.
தனது வாடிக்கையாளர்களில் 790 பேர் மோசடியில் ஏமாந்ததாகவும் அவர்கள் இழந்த தொகை $13.7 மில்லியன் என்றும் கடந்த ஜனவரி மாதம் ஓசிபிசி வங்கி கூறியது.
தம் மீதான ஐந்து குற்றச்சாட்டுகளை லியோங் ஒப்புக்கொண்டார். லியோங்குடன் இதர ஏழு பேரும் சேர்ந்து கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் மோசடியில் ஈடுபட்டதாகவும் அவர்கள் 17 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்ட வயதினர் என்றும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.

