துணைப் பிரதமர்: வலுவான மீட்சிக்கு ஆழமான பங்காளித்துவ உறவுகளும் தேவை
உலக நாடுகள் உறவுகளை ஆழப்படுத்த வேண்டும். பொருளியல்களை ஒருங்கிணைக்க வேண்டும்.
இதன்மூலம் கொவிட்-19 தொற்றில் இருந்து நாடுகள் வலுவாக மீட்சி காண முடியும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்து இருக்கிறார்.
உலக நாடுகள் ஒன்றுக்கொன்று தொடர்புகொண்டு இருக்கின்றன, ஒன்றையொன்று சார்ந்து இருக்கின்றன என்பதையே கொவிட்-19 தொற்று நினைவூட்டியதாக திரு ஹெங் கூறினார்.
நாடுகளுக்கு இடையில் பிரச்சினைகள் நிலவினாலும் ஒத்துழைப்பின் மூலமே வளர்ச்சியையும் செழிப்பையும் சாதிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் புதன்கிழமை திரு ஹெங் தெரிவித்தார்.
ஆகையால், ஆசியாவில் உள்ள நாடுகள் பங்காளித்துவ உறவைப் பலப்படுத்த வேண்டும். தங்கள் பொருளியல்களை ஒருங்கிணைக்க வேண்டும். ஒளிவுமறைவு இல்லாத, எல்லாரையும் உள்ளடக்கும் வழியில் அவை இதனைச் சாதிக்க வேண்டும் என்று திரு ஹெங் குறிப்பிட்டார்.
வருடாந்திர ஆசியாவுக்கான 'பாவோ' கருத்தரங்கில் மெய்நிகர் ரீதியில் உரையாற்றிய திரு ஹெங், நெருக்கடியில் இருந்து நாடுகள் மீண்டு வருவதற்கான மூன்று வழிகளைத் தெரிவித்தார்.
வட்டார பங்காளித்துவ உறவை தொடர்ந்து பலப்படுத்த வேண்டும் என்பது முதலாவது வழி என்று துணைப் பிரதமர் கூறினார்.
வட்டார பரந்த பொருளியல் பங்காளித்துவ உடன்பாடு, பசிபிக் வட்டாரத்திற்கான பரந்த ஏறுமுக பங்காளித்துவ உடன்பாடு ஆகிய இரண்டும் உலகின் ஆகப் பெரிய பலதரப்பு வர்த்தக உடன்பாடுகள் என்பதை அவர் சுட்டினார்.
இவை இரண்டும் ஆசியாவை மையம் கொண்டு இருக்கின்றன என்பதையும் திரு ஹெங் தமது உரையில் குறிப்பிட்டார்.
ஒத்த கருத்துடைய நாடுகள் இந்த ஒத்துழைப்பு ஏற்பாடுகளில் சேர்ந்து கொள்வதைத் தொடர்ந்து தாங்கள் வரவேற்பதாக திரு ஹெங் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, புருணை, மலேசியா, ஜப்பான், வியட்னாம் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து சிங்கப்பூரும் இந்த இரண்டு உடன்பாடுகளில் இடம்பெற்று உள்ளது.
பசிபிக் வட்டாரத்திற்கான பரந்த ஏறுமுக பங்காளித்துவ உடன்பாட்டில் சேர்வதற்கு சீனாவும் பிரிட்டனும் விண்ணப்பித்து இருக்கின்றன என்பதை திரு ஹெங் சுட்டினார்.
கொவிட்-19 தொற்று காரணமாக வேகமடைந்து இருக்கும் பொருளியல் உருமாற்றங்களைப் புதிய வளர்ச்சிக்கான வாய்ப்புகளாக நாடுகள் செம்மையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாரவர்.
மூன்றாவதாக தங்களுடைய பொருளியல்களின் மீள்திறனை நாடுகள் பலப்படுத்த வேண்டும் என்று திரு ஹெங் குறிப்பிட்டார்.
அந்தக் கருத்தரங்கு ஹைனான் தீவில் புதன்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை நடக்கிறது.
'கொவிட்-19 தொற்றின்போதும், அதற்கு அப்பாலும் உலகம்: உலக மேம்பாடு, பொதுவான எதிர்காலத்திற்கு ஒன்றிணைந்து செயல்படுவது' என்ற கருப்பொருளுடன் அந்தக் கருத்தரங்கம் நடந்தது.
திரு ஹெங் சிங்கப்பூரில் இருந்தபடி அதில் கலந்துகொண்டார்.
ஆசியாவின் பொருளியல் வளர்ச்சி வாய்ப்புகள் இந்த ஆண்டில் இரண்டு அம்சங்களை முக்கியமாகச் சார்ந்திருக்கும் என்று திரு ஹெங் குறிப்பிட்டார்.
கொவிட்-19 சூழ்நிலை தொடர்ச்சி, உக்ரேன் பிரச்சினை ஆகியவை அந்த இரண்டு அம்சங்கள் என்றார் துணைப் பிரதமர்.

