'தி ஆன்லைன் சிட்டிசன்' (டிஓசி) இணையத்தளத்தின் ஆசிரியர் டெர்ரி சு எனப்படும் சு யுவான்சென், அதன் கட்டுரையாளர் டேனியல் டி கோஸ்டா அகஸ்டின் இருவருக்கும் நேற்று மூன்று வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் அமைச்சர்கள்மீதான அவதூறுத் தகவல்களை எழுதி, வெளியிட்டதையடுத்து இவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
கட்டுரையாளர் டி கோஸ்டாவிற்கு கணினியைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிரான சட்டத்தின்கீழ் மேலும் மூன்று மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இரண்டு தண்டனைகளையும் அடுத்தடுத்து நிறைவேற்ற அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு நவம்பரில் இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
2018ஆம் ஆண்டு, "மசெக நாடாளுமன்ற உறுப்பினர் சிஜகவிடம் மன்னிப்புக் கோரினார்" எனும் தலைப்பில் டி கோஸ்டா மின்னஞ்சல் அனுப்பினார்.
சிங்கப்பூர் அமைச்சரவை உறுப்பினர்களை அவமதிக்கும் அந்த மின்னஞ்சலைத் தனது நண்பரின் கணக்கில் இருந்து 'டிஓசி'க்கு அவர் அனுப்பினார்.
மசெக தலைமைத்துவத்தில் பெரிய ஊழல் நிலவுவதாகக் கூறிய அந்த மின்னஞ்சல் பின்னர் 'டிஓசி' இணையத்தளத்தில் பதிவிடப்பட்டது.
அவதூறு பரப்பியோருக்கு ஈராண்டு சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

