அரசாங்க வேலைவாய்ப்பு குறித்த தகவல்களுக்கான 'கரியர்ஸ் அட் கவ்' இணையவாசலில் இருந்து வேலைவாய்ப்பு விவரங்களை நகலெடுத்து மோசடி இணையத்தளம் ஒன்றில் பதிவிடப்பட்டிருப்பதாக பொதுச் சேவைப் பிரிவு தெரிவித்தது.
இதன் தொடர்பில் 'ஜாப்சிங்கப்பூர்25எச்.காம்' எனும் இணையத்தளத்தின்மீது காவல்துறையிடம் புகாரளித்திருப்பதாக அது கூறியது.
இணையத்தள உரிமையாளரைத் தொடர்புகொண்டு அரசாங்கப் பணி தொடர்பான அனைத்து விளம்பரங்களையும் அகற்றும்படி கேட்டுக்கொண்டதாகவும் பொதுச் சேவைப் பிரிவு குறிப்பிட்டது.
வேலை தேடுவோர் அரசாங்கப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் 'கரியர்ஸ் அட் கவ்' இணையவாசல் அல்லது வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனங்களின் இணையத்தளங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பதை அது நினைவுறுத்தியது.
தங்களது தனிப்பட்ட தகவல்களையோ தனிப்பட்ட விவரக் குறிப்பையோ அங்கீகரிக்கப்படாத தளங்களில் சமர்ப்பிக்க வேண்டாம் என்று வேலை தேடுவோருக்கு ஆலோசனை கூறப்பட்டது.
இவ்வாறு செய்வதால் மோசடி, தகவல் திருட்டு, அடையாள விவரங்கள் திருடப்படுதல் போன்றவற்றுக்கு வழிவகுக்கக்கூடும் என்று பொதுச் சேவைப் பிரிவு சுட்டியது.
வேலைவாய்ப்புகள் குறித்த சந்தேகம் ஏதும் இருந்தால் சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்பிடமே அதை தெளிவுபடுத்திக் கொள்ளும்படி வேலைதேடுவோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

